Friday, December 19, 2014

கோடம்பாக்கம்--சாலிகிராமம்

கோடம்பாக்கம் - -சாலிகிராமம் பெயர்க்காரணம்

கோடம்பாக்கம். தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஊர்களின் பெயர்களைப்போலவே இதுவும் ஒரு காரணப்பெயர்!.'கோடம்' என்ற சொல்லுக்கு 'எல்லை' என்று பொருள். 'பாக்கம்' என்றால் சிற்றூர். கோடம் + பாக்கம் = கோடம்பாக்கம். ஆதிகால சென்னப்ப நாயக்கன் பட்டினத்தின் மேற்கு எல்லையைச் சார்ந்த ஓர் ஊர் இது என்பதால், இதற்கு இந்தப்பெயர் வந்தது. இது ஒரு காரணம்.

இன்னொரு விளக்கமும் உள்ளது-

'கோடா' என்ற உருதுச் சொல்லுக்கு 'குதிரை' என்றும், 'பாக்' என்பதற்கு 'இடம்' என்றும் பொருள். கோடா+பாக் = 'கோடாபாக்' என்ற தமிழ் உச்சரிப்புச் சொல் திரிந்து நாளடைவில் 'கோடம்பாக்கம்' என்று ஆகிவிட்டது.

அதிருக்கட்டும். குதிரைக்கும் கோடம்பாக்கத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?.

அது என்னவென்றால், ஆங்கிலேயரின் சென்னை வருகைக்கு முற்காலத்தில், ஆற்காட்டை ஆண்டு வந்த 'நவாப்' என்னும் முஸ்லிம் அரசர்கள், மேற்குத் திசையிலிருந்து கிழக்கே உள்ள சென்னப்ப நாயக்கன் பட்டினத்திற்கு தம் பரிவாரங்களுடன் வருவார்கள். அப்போழுதெல்லாம் நீண்ட தூரம் பயணித்து வந்த குதிரைகளிலிருந்து இறங்கி, இந்த இடத்தில் இளைப்பாறி ஓய்வெடுத்துக் கொள்வார்கள். அவர்களைச் சுமந்து ஓடிவந்த குதிரைகளுக்கும் போதிய ஓய்வு கொடுப்பார்கள். அவ்வாறு தமது குதிரைகளை நிறுத்தி வைத்து ஓய்வும், உணவும் கொடுத்த அந்தக் குறிப்பிட்ட இடம் - சிற்றூர்தான், நாளடைவில் 'கோடா பாக்' என்றும், பிறகு 'கோடம்பாக்கம்' என்றும் வழங்கலாயிற்று என்று அதன் வரலாறு கூறுகின்றது.



கோடம்பாக்கத்தைச் சார்ந்து 'ஏவி.எம்', 'பிரசாத்' போன்ற ஸ்டூடியோக்களும், கலைஞர்களும் இருக்கின்ற 'சாலிகிராமம்' என்பதும் காரணப்பெயர்தான். எப்படி என்றால் 'சாலிகன்', 'சாலியன்' என்ற சொல்லுக்கு 'கைத்தறி நெசவாளன்' என்று பொருள். ஒருகாலத்தில் இந்தப் பகுதியில் 'சாலியர்' குடும்பங்கள் நிறைந்திருந்து, நெசவுத் தொழில் நடைபெற்று வந்தது. இதனால் 'சாலிகிராமம்' என்னும் பெயர் உண்டானது. இங்கு நேர்த்தி மிக்க புடவைகள் நெய்யப்பட்டன.

60 ஆண்டுகளுக்கு முன்பு, நான் சென்னை வந்த அந்த நாட்களில் 'கோடம்பாக்கம் புடவை' புகழ் பெற்றிருந்தது. என் தாயார் அதை விரும்பி உடுத்தியதால், நான் ஊருக்குச் செல்லும்போதெல்லாம் நிறைய புடவை வாங்கி இருக்கிறேன். இன்றைக்கு கோடம்பாக்கமும், அதைச்சார்ந்த சாலிகிராமமும் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட அந்த அழகிய வண்ணவண்ண புடவைகள் மட்டும் இல்லை.

Wednesday, December 3, 2014

சாப்ளினுக்கு அமெரிக்கா தடை

சாப்ளினுக்கு அமெரிக்கா தடை

மனிதர்கள் எதிர்கொள்ளும் சோதனைகளையும், நெகிழ்வான தருணங்களையும் திரைப்படங்கள் மூலம் நகைச்சுவையாகச் சொன்னவர் சார்லி சாப்ளின்.
பிரிட்டனைச் சேர்ந்த அவர், தனது கலைவாழ்க்கையின் ஆரம்பகட்டத்தில் அவ்வப்போது அமெரிக்காவுக்குச் சென்றுவருவார். 1913-ல் அவர் நடித்த ‘மேக்கிங் எ லிவிங்’ என்ற படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகில் புயலாக நுழைந்தார். ‘தி கோல்டு ரஷ்’, ‘மாடர்ன் டைம்ஸ்’, ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்று பல படங்களை உருவாக்கி, ஹாலிவுட்டின் சிறந்த கலைஞரானார்.
அவரது படங்கள் ஏழைகளின் பரிதாப வாழ்வைச் சித்தரித்ததுடன், முதலாளி வர்க்கத்தின் பேராசையையும் விமர்சித்தன. எனவே, ஒரு கம்யூனிஸ்ட் என்று கருதி அமெரிக்க அரசு அவரை வெறுத்தது. 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் இருந்தும், அவர் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற முயலவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், 1952 செப்டம்பர் 18-ல், தனது ‘லைம்லைட்’ படத்தைப் பிரபலப்படுத்தும் முயற்சியாக 21 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அதற்கு அடுத்த நாள், அவர் மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்தது அமெரிக்க அரசு. கப்பலில் இருந்த அவருக்கு இந்தத் தகவல் கிடைத்தது. “நான் அரசியல்வாதி அல்ல; தனிமனிதன். அதேசமயம், நான் அதீத தேசபக்தன் அல்ல. அதீத தேசபக்தி ஹிட்லரிசத்தைத்தான் உருவாக்கும்” என்றார் சாப்ளின்.
அதன் பிறகு, பல ஆண்டுகள் அவர் பிரிட்டனிலேயே தங்கி, திரைப்படங்களை உருவாக்கினார். 1972-ல் அவரை அழைத்து, ஆஸ்கர் விருது வழங்கி, வரலாற்றுத் தவறைச் சரிசெய்துகொண்டது அமெரிக்கா.

மரணத்தின் கோரத் தாண்டவம் நிகழ்ந்தபோது...

என்ன காரணம்?
1984, டிசம்பர்-2 அதிகாலை அந்தக் கொடிய விபத்து நடந்த தருணத்தில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்த மொத்த மீத்தைல் ஐசோசயனைடின் அளவு 63 டன். 610, 611, 619 ஆகிய எண்கள் இடப்பட்ட கலன்களில் மொத்த மீத்தைல் ஐசோசயனைடும் வைக்கப்பட்டிருந்தன. விதிமுறைப்படி, இந்தக் கொள்கலன்களெல்லாம் பாதிக்கு மேல் நிரப்பப்படக் கூடாது. ஏதாவது வேதிவினை நிகழ்ந்தால் அதைத் தடுப்பதற்கான வேதிப்பொருளைச் செலுத்துவதற்காகத்தான் அப்படி ஒரு விதிமுறை. ஆனால், 610 என்ற கலனில் 42 டன் மீத்தைல் ஐசோசயனைடு வைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட அந்தக் கலனின் முழுக் கொள்ளளவு இது. அப்பட்டமாக எல்லாம் மீறப்பட்டன என்பதற்கு ஓர் உதாரணம் இது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிக்கன நடவடிக்கை என்று சொல்லி முன்னரே கைவிட்டிருந்தார்கள்.
ஊழியர்களின் அறியாமை, நிர்வாகத்தின் பொறுப்பற்றதனம், அரசின் அலட்சியம் எல்லாம் சேர்ந்து இந்தப் பேரழிவை நிகழ்த்தியது.
மரணத்தின் திசை
போபாலின் ஹமீதியா மருத்துவமனையில் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை நிகழ்த்தியபோது தெரிந்த அறிகுறிகள் சுட்டிக்காட்டிய திசை ஒன்றுதான்: ஹைட்ரோசயனைடு அமிலம். அந்த அமிலத்துக்கு ஒரு எதிர்மருந்து இருக்கிறது: சோடியம் தையோசல்ஃபேட். இந்தக் கண்டுபிடிப்பை பெரிய டாக்டரிடம் தெரிவித்தபோது அவர் நம்பவில்லை. ஹைட்ரோசயனைடுக்கு இங்கே என்ன வேலை என்பதுதான் அதற்குக் காரணம். உயர் வெப்பநிலையில் மீத்தைல் ஐசோசயனைடிலிருந்து ஹைட்ரோசயனைடு அமிலம் உருவாகக் கூடும் என்பது அந்த பெரிய டாக்டருக்குத் தெரியவில்லை. அவருக்குத் தெரிந்திருந்தால் ஏராளமானோரை உடனடியாகக் காப்பாற்றியிருந்திருக்கலாம்.


இறப்பிலும் ஆதாயம் தேடி…
முன்வாசலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தை அனுப்பி போபால்வாசிகளைக் கொன்ற அமெரிக்கா, பின்வாசல் வழியாக வேறு சிலரையும் அனுப்பியது: அமெரிக்க வழக்கறிஞர்கள்! பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்கள் இப்படியெல்லாம் பேசினார்கள்: “யூனியன் கார்பைடு நிறுவனத்தைச் சும்மா விடக் கூடாது. நாங்கள் உங்களுக்காகவே வந்திருக்கிறோம். அமெரிக்காவில் அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்து, உங்களுக்கு உரிய நிவாரணம் வாங்கித்தருகிறோம். சாதாரணத் தொகையல்ல: ஆளுக்கு ரூ. 10 லட்சம். மொத்தத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே எங்கள் கட்டணம்.”
உண்மையான வில்லன்
உண்மையான வில்லன் மீத்தைல் ஐசோசயனைடு அல்ல, ஹைட்ரோசயனைடு அமிலம்தான். போபால் பேரழிவில் பெரும்பாலான மரணங்களுக்கும் பாதிப்புகளுக்கும் காரணம் அதுதான். உயர் வெப்பநிலையில் மீத்தைல் ஐசோசயனைடு பல்வேறு வாயுக்களாகப் பிரிகிறது. அதில் ஒன்றுதான் ஹைட்ரோசயனைடு அமிலம்.
கடவுளைச் சந்திக்கும்போது…
பேரழிவுக்கு மத்தியில்தான் மனிதர்களின் உன்னத குணங்களும் அற்ப குணங்களும் வெளிப்படும் என்பது உண்மை. ஒரு முஸ்லிம் பெண்ணின் பிரேதத்தை மீட்புப் பணியினர் எடுத்துச் செல்ல முயன்றபோது இந்துப் பெண் ஒருவர் அவர்களைத் தடுத்து நிறுத்தினார். தன் கையிலுள்ள வளையல்கள் உள்ளிட்ட அணிகலன்களை அந்த முஸ்லிம் பெண்ணுக்குச் சூட்டிவிட்டுச் சொல்லியிருக்கிறார்: “இந்தப் பெண் என்னுடைய தோழி. கடவுளைச் சந்திக்கும்போது அவள் அழகாக இருக்க வேண்டும்.”
நடைப்பிணமான நாயகன்
நூற்றுக் கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டர் வி.கே. சர்மாவின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. மருத்துவமனையில் பிணங்களைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த புகைப்படக்காரர் ஒரு உடலிலிருந்து சிறு அசைவு தென்பட்டதைப் பார்த்து உடனடியாக டாக்டரிடம் தெரிவிக்க, இறந்துகொண்டிருந்த அந்த உயிரை டாக்டர் காப்பாற்றினார். அது வேறு யாருமல்ல. வி.கே. சர்மாதான். உயிர்பிழைத்தாலும் வி.கே. சர்மா நடைப்பிணம் போன்றுதான் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கிறார். தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நூற்றுக் கணக்கானோரைக் காப்பாற்றிய அவருக்கு இந்திய அரசு கொடுத்த நிவாரணத் தொகை எவ்வளவு தெரியுமா? 35,000 ரூபாய்தான்.
உயிரைக் காப்பாற்றிய ஈரத் துண்டு
ஈரத் துண்டு எத்தனை பேர் உயிரை அப்போது காப்பாற்றியது தெரியுமா? பிறருடைய உயிரைக் காப்பாற்றச் சென்றவர்கள்கூட ஈரத் துண்டை முகத்தில் பொத்திக்கொண்டுதான் சென்றார்கள். வலுகுறைப்பானாகத் திறம்படச் செயல்பட்டது ஈரத் துண்டு. பிழைத்தவர்களில் பலரும் கும்பிடும் தெய்வங்களுள் ஈரத் துண்டும் ஒன்று.
அதீத மூச்சு ஆபத்தே
விஷவாயு கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தபோது அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தப்பிச்செல்ல முயன்றவர்கள்தான். வேகமாக ஓடியபோது அதிகக் காற்றை உள்ளிழுக்க நேர்ந்ததால் விரைவாக அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அவர்களோடு ஒப்பிட்டால், வீடுகளில் ஒடுங்கி இருந்தவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு சற்றுக் குறைவே.
நாயகன்
போபால் ஸ்டேஷன் மாஸ்டர் வி.கே. சர்மாதான் உண்மையான ‘நாயகன்’. விஷவாயுவின் அசுரத் தாக்குதலுக்கு மத்தியில் அந்த ஸ்டேஷனை நெருங்கிக்கொண்டிருந்த கோரக்பூர் ரயிலின் பயணிகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமே! லாந்தர்களுடன் அவர் அனுப்பிய ஆட்களாலும் ரயிலைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. பிளாட்ஃபாரத்தை நோக்கி ரயில் வந்துகொண்டிருப்பதைப் பார்த்த சர்மாவுக்குப் பகீரென்றிருந்தது. உடனடியாக ஒலிபெருக்கியில் உருது, இந்தியில் எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்தார். மேலிட ஆணை இல்லாமல் ரயிலை உடனடியாகக் கிளம்பாமல் ஓட்டுநர் காத்திருந்தார். முகத்தில் பொத்திய ஈரத் துணியுடன் பிணக் குவியல்களைத் தாண்டி வேகமாக ஓடிய சர்மா, ஓட்டுநரிடம் அவசரஅவசரமாகத் தகவல்களைத் தெரிவிக்கவும், ரயில் உடனடியாகப் புறப்பட்டது.
எல்லாம் இழந்த பின்னும்…
சஜீதா பானுவின் நிலைதான் இன்னும் மோசம். போபால் பேரழிவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், யூனியன் கார்பைடு கம்பெனியில் ஏற்பட்ட வாயுக் கசிவில் அவள் தன்னுடைய கணவர் முகம்மது அஷ்ரஃபை இழந்திருந்தார். அதாவது, அந்த விஷவாயுவின் முதல் பலியே அஷ்ரஃப்தான். போபால் பேரழிவின்போது தன்னுடைய குழந்தை ஒன்றையும் சஜீதா இழந்தார். இருந்தும், இன்று வரை அவருக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.
மரணத்தின் பால்
அந்தப் பேரழிவின்போது பலரையும் காப்பாற்றிய டாக்டர் சர்க்காரால் அதற்குப் பிறகு ஒருபோதும் அந்தக் காட்சியை மறந்திருக்க முடியாது. போபால் ரயில்வே பிளாட்ஃபாரத்தில் பிணக் குவியல்களுக்கு மத்தியில் ஏதோ அசைவைக் கண்டிருக்கிறார். அருகே வந்து பார்த்தார்: இறந்துகிடந்த தன் தாயின் உயிரற்ற மார்பை ஒரு குழந்தை சப்பிக்கொண்டிருந்தது!

போபால் - விலகாத அழிவின் நிழல்

டிசம்பர் 2, 1984. நள்ளிரவு. கடுங்குளிர். நாய்கள் ஓலமிடுகின்றன. ஊர் பாதித் தூக்கத்தில் எழுகிறது. மூச்சுத் திணறுகிறது. காற்றுக்காகக் கதவைத் திறந்து வெளியே வருபவர்கள் காற்றில் எரிச்சலை உணர்கிறார்கள். இன்னதென்று யோசிக்கும் முன் ‘யூனியன் கார்பைடு’ தொழிற்சாலையிலிருந்து அபாயச் சங்கு ஒலிக்கிறது. ஓடுகிறார்கள். சரிகிறார்கள். சாகிறார்கள். விடிந்தபோது வீதியெங்கும் மனிதப் பிணங்களின் எண்ணிக்கைக்கு இணையாக கால்நடைகள், பறவைகளின் உடல்கள். அன்று தொடங்கி போபால் மக்கள் போராடுகிறார்கள். கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் செத்திருக்கிறார்கள். 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பிறக்கும் ஒவ்வொரு 25-வது குழந்தையும் குறைபாடுடைய குழந்தையாகப் பிறக்கிறது. ஆலையைச் சுற்றியுள்ள 3 கி.மீ. பரப்பளவுக்கு நிலத்தடி நீர் நஞ்சாகியிருக்கிறது. இன்னமும் ‘யூனியன் கார்பைடு’ விட்டுச்சென்ற 350 டன் நச்சுக் கழிவு அகற்றப்படவில்லை.
*இந்தியாவில் தொழில் தொடங்க உரிமம் கோரி, யூனியன் கார்பைடு நிறுவனம் 1.1.1970-ல் விண்ணப்பித்தது. நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த விண்ணப்பத்தின் மீது 31.10.1975-ல் திடீரென முடிவெடுக்கப்பட்டு ஒப்புதல் தரப்பட்டது. நெருக்கடி நிலை அறிவிப்பு அமலில் இருந்த காலம் அது.
*போபால் ‘யூனியன் கார்பைடு’ ஆலை மிக அபாயகரமான ரசாயனங்களைக் கையாள்வது அன்றைக்குப் பெரும்பான்மை மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கொள்கலன் வெடித்து விஷ வாயு கசிந்தால், எப்படி எதிர்கொள்வது என்பது அங்குள்ள மருத்துவர்களுக்குக்கூடச் சொல்லப்பட்டிருக்கவில்லை.
*சம்பவம் முடிந்து நான்காவது நாள் ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் போபால் வந்தார். மத்தியப் பிரதேச அரசு அவரையும் அவருடைய இந்திய சகாக்களையும் கைதுசெய்தது. அவருடைய ஆலையின் விருந்தினர் மாளிகையிலேயே அவர் தங்கவைக்கப்பட்டார். அடுத்த சில மணிநேரங்களில் ஆண்டர்சனை விடுவித்தார் முதல்வர் அர்ஜுன் சிங். அரசு விமானத்திலேயே டெல்லிக்கு அனுப்பி, அங்கிருந்து அமெரிக்கா செல்ல வழிவகுத்தார். அன்றைய தினம் மத்தியப் பிரதேசத்தில்தான் சாகர் என்ற ஊரில் இருந்தார் வெளியுறவுத் துறையைத் தன்வசம் வைத்திருந்த பிரதமர் ராஜீவ் காந்தி. ஆனால், ஆண்டர்சன் விவகாரம் அவருக்குத் தெரியாது எனச் சாதித்தனர் காங்கிரஸ் தலைவர்கள். இது தொடர்பான பதிவுகளே வெளியுறவுத் துறையிடம் இல்லை என்று பின்னாளில் அறிவித்தது அரசு.
*அமெரிக்க நீதிமன்றங்களை நாட ஆரம்பித்தார்கள் போபால் மக்கள். அமெரிக்காவில் இந்த வழக்கை நடத்தினால், பெரும் தொகையை இழப்பீடாகத் தர வேண்டியிருக்கும்; இந்தியாவிலேயே வைத்து முடித்துவிடலாம் என்று ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்துக்கு ஆலோசனை சொன்னவர்கள் இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள். பல ஊடகங்களும் விலைபோயின. ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடந்த இந்தச் சம்பவத்தை, தொழிலாளர்களின் சதியால் நடந்தது என்றெல்லாம்கூட எழுதின.
*இந்தியாவில் வழக்கு விசாரணை நடக்க ஆரம்பித்த பின், முதலில் இழப்பீடாக 300 கோடி டாலர்களைக் கேட்ட இந்திய அரசு, ஒருகட்டத்தில் அமெரிக்க நெருக்கடிக்கு உடன்பட்டு, 47 கோடி டாலர்களுக்குச் சம்மதித்தது. இதையும் பெற மக்கள் 20 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதிக்க வேண்டியிருந்தது. இடைப்பட்ட காலத்திலேயே ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்தைக் கையகப்படுத்தியது ‘டௌ’ நிறுவனம். உலகின் மோசமான தொழிற்சாலைப் பேரழிவான இந்த வழக்கில் 26 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பளித்தது நம்முடைய நீதிமன்றம். குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை: 2 ஆண்டு சிறை, ரூ. 1.01 லட்சம் அபராதம். இத்தனை அனுபவங்களுக்குப் பின்னரும், சர்வதேச நிர்ப்பந்தங்களால் மக்கள் பாதிப்படையும் வகையில் அணுசக்தி இழப்பீட்டு மசோதாவை நிறைவேற்றியது மன்மோகன் சிங் அரசு.
*‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்தின் சார்பிலும் ‘டௌ’ நிறுவனம் சார்பிலும் செயல்பட இங்கு பலருக்கும் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் ‘யூனியன் கார்பைடு’ சார்பில் ஆஜரானவர் நானி பால்கிவாலா. ‘டைம்’ இதழுக்கு 1984-ல் அளித்த பேட்டியின்போது, “இந்தியாவில், ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால், அடுத்த நூற்றாண்டில்தான் தீர்ப்பு வரும்” என்று சொன்னார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான அபிஷேக் மனு சிங்வி, பாஜகவின் இன்றைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இருவருமே ‘டௌ’ நிறுவனத்துக்குச் சட்ட ஆலோசனை வழங்கியவர்கள். 2008-ல் பாஜக ‘டௌ’ நிறுவனத்திடமிருந்து நன்கொடையைப் பெற்றது.
*போபால் மக்கள் நீண்ட காலமாகப் போராடினார்கள், வாரன் ஆண்டர்சனைக் கைதுசெய்து இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று. பிழைப்புக்காக ஸ்வீடனிலிருந்து அமெரிக் காவுக்கு வந்த ஒரு தச்சுத் தொழிலாளியின் மகன். ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்தில் ஒரு விற்பனையாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். நாசகார ரசாயனத் தொழிற்சாலைகளால் விளையும் ஆபத்தை எப்படி எதிர்கொள்வது என்று ஏகாதிபத்திய நாடுகள் யோசித்த நாட்களில், அமெரிக்கா, ஐரோப்பாவைத் தாண்டி ‘யூனியன் கார்பைடு’ நிறுவனச் செயல்பாடுகளை மூன்றாம் உலக நாடுகளான லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஆசிய நாடுகளுக்குக் கொண்டுசென்றவர். ஏகாதிபத்திய சேவையாலேயே பின்னாளில் அந்நிறுவனத்தின் தலைவராக உயர்ந்தவர். கடந்த செப்.29 அன்று இறந்தார்.
*பேரழிவின் பாதிப்பிலிருந்து இன்னும் வெளியேற முடியாமல் தவிக்கும் போபால் மக்கள் நவீன சிகிச்சைக்கும் தொடர் சிகிச்சைக்கும்கூட போதிய உதவியில்லாமல் பரிதவிக்கிறார்கள். அந்தக் கழிவுகளை எப்படி அகற்றுவது என்று நம் அரசுக்கு இன்னும் தெரியவில்லை. இதற்கென ரூ. 25 கோடி நிதி ஒதுக்கி ஜெர்மனியைச் சேர்ந்த ‘ஜி.ஐ.எஸ்.’ நிறுவனத்திடம் கழிவகற்றும் பணியை ஒப்படைத்தது. ஆனால், கழிவுகளை அகற்றுவதில் உள்ள சவால்கள், விபத்து அபாயம், அதற்குப் பொறுப்பேற்கும் சுமை உள்ளிட்ட விஷயங்களை யோசித்த அந்த நிறுவனமும் பின்வாங்கிவிட்டது. கழிவு நிலத்தையும் நீரையும் நஞ்சாக்கி மனிதர்களை முடக்கிக்கொண்டிருக்கிறது. துரோங்கள் தொடர்கின்றன. நாம் வேடிக்கை பார்க்கிறோம்.

Monday, July 7, 2014

சாத்தூருக்குப் பெருமை சேர்க்கும் சேவு


பாரதியார் வீரப் பலகாரங்கள் என ஒரு பட்டியல் போடுகிறார். அதாவது சாப்பிடுவதற்குக் ‘கரமுறகரமுற’ என இருக்கும் முறுக்கு, வறுவல்(சீவல்), சேவு போன்ற இந்தப் பலகாரங்களைச் சாப்பிட்டால் ஓர் உற்சாகம் பிறக்கும். இம்மாதிரியான பலகாரங்களுக்கு அவர் வேடிக்கையாக ‘வீரப் பலகாரம்’ எனச் சிறப்பு அடைமொழி கொடுக்கிறார்.
இந்த வீரப் பலகாரத்தில் குறிப்பிடத்தகுந்தது ‘சேவு’. இதை வட தமிழகத்தில் ‘காரசேவு’ என அழைக்கிறார்கள். பொதுவாகத் தென்மாவட்டத்தில் பெரும்பாலான ஊர்கள் முறுக்கு, சேவு, வறுவல் தயாரிப்பில் பெயர் பெற்றவை. கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், விருதுநகர் ஆகிய ஊர்களில் இந்தப் பலகாரங்களைத் தயாரிக்கும் பட்டறைகள் அதிக அளவில் இருக்கின்றன. ஆனாலும் சேவுக்கெனப் புகழ் பெற்ற ஊர் சாத்தூர்தான்.
சென்னை - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் உள்ள இந்த ஊரைத் தாண்டிச் செல்லும் யாரையும் தன்பால் ஈர்த்துவிடும் குணம் கொண்டது சாத்தூர் சேவு. சாத்தூர் பேருந்து நிலையத்திலேயே ‘சாத்தூர் சேவு’ ‘சாத்தூர் சேவு’ என ஒலிக்கும் வியாபாரிகள் சத்தம் சாத்தூர் சேவின் ருசிக்குச் சான்றாகும். சாத்தூர் இந்தப் பெருமையைத் தக்கவைத்துக்கொண்டிருக்கக் காரணம் சண்முக நாடார் மிட்டாய்க் கடைதான். சாத்தூர் நகராட்சி பஸ் ஸ்டாண்டுக்கு அருகே ரயில்வே சாலையில் உள்ளது நூறு வருடம் பழமையான இந்தக் கடை.
இந்தக் கார சேவு, வட இந்தியத் தின்பண்டமான ‘புஜியா’விலிருந்து வந்திருக் கலாம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் புஜியா இன்னும் சிறியதாக இருக்கும். சண்முகவேல்
நாடார் நூறாண்டுகளுக்கு முன்பே இத்தொழிலைச் சாத்தூரில் தொடங்கினார். ஆனால், அப்போது சேவு அல்லாத பலவிதமான தின்பண்டங்களைத் தயாரித்து விற்றுவந்தார். பிறகு சேவு
அந்தப் பகுதியில் பிரபலமாக, அதையும் தயாரித்து விற்றார். சண்முகவேல் நாடாரின் தயாரிப்பு சேவுக்குக் கூடுதல் சுவையைக் கொடுக்க, அது சாத்துருக்கே பெருமை அளிக்கும் விஷயமானது.
சண்முகவேல் நாடாரின் கடைக்கு 1964-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜர் வந்திருக்கிறார். இன்னும் பல முக்கியஸ்தர்களைச் சண்முக நாடாரது சேவின் சுவை இழுத்து வந்திருக்கிறது. சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் சாத்தூர் சேவை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். நாளொன்றுக்கு 150 கிலோ வரை சண்முக நாடார் கடையில் சேவு விற்பனையாகிறது. இப்போது இந்தக் கடையைச் சண்முக நாடாரின் மூன்றாம் தலைமுறையினர் நிர்வகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
கொடைக்கானலில் இருந்து தருவிக்கப்படும் பூண்டும், தனித்துவமான கைப்பக்குவமும், சுத்தமான பகுதிப் பொட்களும்தான் சண்முக நாடார் கடைச் சேவின் தனி ருசிக்குக் காரணம். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்ப் பொடி, கடலை எண்ணெய், சீரகம், பூண்டு, வெங்காயம், கல் உப்பு ஆகியவைதான் சேவு தயாரிப்பின் பகுதிப் பொருள்களாகும்.
சுத்தமான தண்ணீரில் எடுத்துவைத்துள்ள மிளகாய்ப் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கரைசலாக்கிக் கொள்ள வேண்டும். பூண்டு, பெருங்காயம் இரண்டையும் அரைத்து விழுதாக்கித்
தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர்க் கரைசலுடன் கடலைமாவு, அரிசி மாவு இரண்டையும் கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைய வேண்டும். அரைத்து விழுதாக்கப்பட்ட பூண்டு, பெருங்காயக் கலவையை அதனுடன் சேர்த்துப் பிசைய வேண்டும். பிறகு சீரகத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையைச் சேவு பிழியும் சாதனத்தில் இட்டு அடுப்பில் கொதிக்கவைக்கப்பட்ட கடலை எண்ணெயில் மாவைக் குச்சி குச்சியாகப் பிழிய வேண்டும். பிறகு அதைப் பக்குவமாக வேகவிட்டு எடுத்தால் மொறு மொறுயான சேவு தயார்!

Thursday, July 3, 2014

இந்துக்களின் சம்பிரதாயம்

இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் விஞ்ஞான காரணங்கள்!
இந்து மதம் என்பது ஒரு புதிரான மதமாகும். எண்ணிலடங்கா சடங்குகள், மரபுகள் மற்றும் சம்பிரதாயங்கள் இந்த நம்பிக்கையின் பின்புலமாக அமைகிறது. இவ்வகையான சடங்குகளின் அவசியம் என்ன என நம்மில் பலருக்கும் கேள்வு கேட்க தோன்றும். இன்றைய நவீன உலகத்தில் அது எப்படி பொருத்தமாக அமையும் என்றும் தோன்றும். நம்மில் பலரும் பல சடங்குகளை மூட நம்பிக்கை என கூறி ஒதுக்கி வைத்து விடுகிறோம். ஆனால் அவைகள் எல்லாம் பழங்காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருபவைகளாகும். ஆனால், அனைத்து இந்து சடங்குகளும் மூட நம்பிக்கைகளா? இதற்கான விடை உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும்.

பொதுவாகவே மூட நம்பிக்கைகளையும் குருட்டு நம்பிக்கைகளையும் வளர்த்து வருவதாக குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களுக்கும் ஆளாகியிருக்கிறது இந்து மதம். ஆனால் உண்மை மிகவும் அப்பாற்ப்பட்டது இது. இந்து மதம் என்பது உலகத்தில் உள்ள விஞ்ஞான வடிவிலான மதங்களில் ஒன்றாகும். அதன் வழக்கங்களும் மரபுகளும் காரண காரியத் தொடர்புடைய விஞ்ஞான காரணங்களை அதன் பின் வைத்திருக்கும். ஒவ்வொரு சடங்குகளும் நாம் நலமுடன இருப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அது தனிப்பட்டவரின் செய மேம்பாட்டுக்கும் உதவும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

நமஸ்காரம்
நமஸ்காரம் செய்வது இந்தியர்களின் உன்னதமான சைகையாகும். பொதுவாக இதை மரியாதை அளிக்கும் சைகையாக பார்க்கிறனர். ஆனால், நமஸ்காரம் செய்யும் போது, இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது, உங்களின் விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும். அவைகள் ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்பட தொடங்கும். இதனால் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்க செய்யும்.

கோவில் மணிகள்
கோவில் மணிகள் சாதாரண உலோகத்தில் செய்யப்படுவதில்லை. காட்மியம், ஜின்க், லெட், காப்பர், நிக்கல், க்ரோமியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல உலோகங்களை கொண்டு செய்யப்படுபவை தான் மணிகள். கோவில் மணியை செய்ய ஒவ்வொரு உலோகத்தையும் சரியான அளவில் கலக்க வேண்டும். அதன் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானம் என்னவென்று தெரியுமா? மணியை ஒலிக்க செய்யும் போது ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு தனித்துவமான ஒலியாய் எழுப்பும். இது உங்கள் இடது மற்றும் வலது மூளையை இணைக்க செய்யும். அதனால் மணி அடித்த அடுத்த தருணமே, நீண்ட நேரம் ஒலிக்கும் கூர்மையான சத்தம் எழும். இது 7 நொடிகள் வரை நீடிக்கும். மணியில் இருந்து எழும் எதிரொலி உங்கள் உடலில் உள்ள 7 குணமாதல் மையங்களையும் (சக்கரங்கள்) தொடும். அதனால் மணி ஒலித்த உடனேயே, உங்கள் மூளை சில வினாடிகளுக்கு வெறுமையாகி விடும். அப்போது மெய்மறதி நிலையை அடைவீர்கள். இந்த மெய்மறதி நிலையில், உங்கள் மூளை சொல்வதை வரவேற்கும் பண்பை பெறும்.

துளசியை வழிபடுதல்
இந்தியாவில் உள்ள முக்கால்வாசி இந்துக்களின் வீடுகளில் துளசி செடியுடன் கூடிய துளசி மாடம் இருக்கும். அதனை தினசரி வழிபடுவார்கள். அதற்கு காரணம் துளசியில் உள்ள உயர்ந்த மருத்துவ குணங்கள். துளசி செடியின் மகத்துவத்தை புரிந்து கொண்ட பழங்கால முனிவர்கள், அது அழிந்து விடாமல் காப்பதற்காக, அதனை வழிபடும் சடங்கை உண்டாக்கினார்கள். அப்படி செய்வதால் அச்செடியை மதித்து அதனை பத்திரமாக பாதுகாத்திடுவர்.

அரசமரம்
பொதுவாக அரசமரத்தை பயனற்ற மரமாக பார்க்கின்றனர். அதனால் எந்த ஒரு கனியோ அல்லது திடமான மரமோ கிடைப்பதில்லை. இருந்தும் கூட அதனை பல இந்துக்கள் வழிபடுகின்றனர். ஆனால், இரவு நேரத்தில் ஆக்சிஜென் உண்டாக்கும் சில மரங்களில் அரசமரமும் ஒன்று. என்ன சுவாரசியமாக உள்ளதா? அதனால், இந்த மரத்தை பாதுகாப்பாக வைத்திடவே அதை புனித மரமாக கருதுகின்றனர்.

காலையில் சூரியனை வழிபடுதல்
காலையில் சூரியனை வழிபடுதல் விடியற்காலையில் சூரிய பகவானை வணங்கும் வழக்கம் இந்துக்களிடம் உள்ளது. அதற்கு காரணம் விடியற்காலையில் வரும் சூரிய ஒளிகள் கண்களுக்கு மிகவும் நல்லதாகும். மேலும் காலையில் வேகமாக எழுந்திருப்பது உடலுக்கு ஆரோக்கியமானது.

உணவருந்திய பின் இனிப்பு உண்ணுவது
இந்தியாவில் காரசாரமான பதார்த்தங்களோடு ஆரம்பிக்கும் உணவு, இனிப்பு பண்டங்களுடன் முடிவடையும். அதற்கு காரணம் செரிமான அமைப்பு மற்றும் அமிலங்களை செயல்படுத்த செய்வது காரசாரமான உணவுகள். இந்த செயற்பாட்டை குறைத்திடும் இனிப்புகள். அதனால் உணவருந்திய பிறகு இனிப்புகள் உண்ண பரிந்துரைக்கப்படுகிறது.
தரையில் அமர்ந்து உண்ணுவது
நாம் தரையில் அமரும் போது சுகாசன் தோரணையில் அமர்கிறோம். இந்த தோரணை செரிமானத்தை மேம்படுத்தும். அதனால் நாம் சுகாசன் தோரணையில் அமரும் போது நம் உணவு சுலபமாக செரிமானமடையும்.

Wednesday, July 2, 2014

ரசிகர்கள்தான் என்னை நகைச்சுவை நடிகன் ஆக்கினார்கள்!'



நடிகர் நாகேஷ் 

தமிழ்ப்பட உலகில் தான் பெரிய நகைச்சுவை நடிகராவோம் என்று நாகேஷ் கனவில் கூட நினைத்தது இல்லை. பத்து வருடங்களுக்கு முன்னால், மாம்பலம் கிளப் ஹவுஸ் விடுதியில், படுக்க இடமின்றி 'மொபைல் நாகேஷா'கத் திண்டாடியபோது, இதே பட்டணத்தில் தனக்கு ஒருநாள் பங்களா வாசமும் கார் சவாரியும் கிடைக்கும் என்று அவர் கற்பனைகூடச் செய்து பார்த்தது கிடையாது. 

''காரியாலய நாடகங்களிலும் அமெச்சூர் நாடகங்களிலும் நான் நடித்தபோது எல்லோரும் சிரித்தார்கள்; கைதட்டினார்கள். 'நாகேஷ் வந்தால் சிரிக்க வைப்பான்' என்று அவர்களே முடிவுகட்டிவிட்டார்கள். ரசிகர்கள்தான் என்னை நகைச்சுவை நடிகனாக்கினார்கள். ஆகவே, முழுப் பொறுப்பும் அவர்களுடையது தான்'' என்கிறார் நாகேஷ். 

1933-ம் வருஷம் செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர் நாகேஷ். நிஜப்பெயர் குண்டுராவ். 1951-ம் வருஷம் மார்ச் மாதம் 17-ம் தேதியைத் தன்னால் மறக்கவேமுடியாது என்கிறார். அன்றுதான் அவருக்கு வைசூரி போட்டது. அதன் பலனாக அவர் முகத்தில் ஏற்பட்ட மாற்றம், அவர் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் குலுங்கிக் குலுங்கிக் அழுதார். தன் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று நினைத்தார். கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தவர், படிப்பை நிறுத்திவிட்டு ஹைதராபாத் சென்று ரேடியோ கம்பெனி ஒன்றில் சிறிது காலம் பணியாற்றினார். பிறகு சென்னையில் குடியேறி, ரயில்வே ஆபீசில் என்.ஜி.ஓ-வாக வேலைக்கு அமர்ந்தார். 

''உண்மையைச் சொல்கிறேன்... எனக்குக் கொடுத்த சம்பளம் தண்டம். நான் ஒழுங்காகவே வேலை செய்யமாட்டேன். நாடக வசனம்தான் உருப்போட்டுக்கிட்டிருப்பேன். நாலு மணி அடிச்சா ஏதாவது சாக்கு சொல்லிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிடுவேன். ஒரு நாள், மேல் அதிகாரி எனக்கு அனுமதி கொடுக்கமாட்டேன்னுட்டார். 'அப்படின்னா நான் போன வாரம் கடனா கொடுத்த எட்டணாவைத் திருப்பிக் கொடுங்க, சார்!' என்று கேட்டு எல்லார் எதிர்லேயும் அவர் மானத்தை வாங்கிவிட்டேன். பாவம், அவர்கிட்டே எட்டணா கூட இல்லே. மரியாதையா என்னை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டார். 

எப்படி எனக்கு நடிப்பில் ஆசை வந்ததுன்னு கேட்கறீங்களா... சொல்றேன். ஒரு நாள் மாம்பலம் தேவி பாடசாலையில் ஒரு நாடக ஒத்திகை நடந்துகொண்டிருந்தது. அதுலே ஒரு காரெக்டர் சரியா டயலாக் பேசவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான் டைரக்டரைப் பார்த்து 'இப்படிப் பேசினால் நன்றாக இருக்குமே' என்று சொல்லிப் பேசிக் காட்டினேன். ஆனால், அவர் என்னை அலட்சியப்படுத்திவிட்டார். அன்று முதல் எனக்கு நாடகத்திலே நடிக்கணும்னு ஒரு வெறி ஏற்பட்டது. ஆபீஸ்லே 'எங்கே இன்பம்?' என்று ஒரு நாடகம் போட்டாங்க. அதுலே ஒரு சீன்லே நடிச்சு நல்ல பெயர் வாங்கினேன். அவ்வளவு தான்... நாடகப் பித்து நல்லா பிடிச்சுடுச்சு. அப்போதுதான் வீரபாகு என்கிறவர் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொல்லி, 'தாமரைக் குளம்' என்கிற படத்தில் நடிக்க அழைத்தார். உடனே வேலையை விட்டுட்டுப் போய் அதுலே நடித்தேன். ஆனால், பெயரும் வரல்லே; எதிர்பார்த்த பணமும் வரல்லே..!'' 

அதற்குப் பிறகுதான் நாகேஷ் மிகவும் கஷ்டப்பட்டார். அப்போது அவருக்குக் கைகொடுத்து உதவியவர் நடிகர் பாலாஜி. நாகேஷை தன் வீட்டிலேயே இருக்கச் சொல்லி, சாப்பாடும் டானிக்கும் கொடுத்து, நல்ல பர்ஸனாலிட்டியாக்கப் பாடுபட் டார். பட முதலாளிகளிடமும் டைரக்டர்களிடமும் முன்னணி நடிகர்களிடமும் நாகேஷை அறிமுகப்படுத்தி, ''சார், இவனுக்கு ஒரு சிறு பாகம் கொடுத்து ஐந்நூறு ரூபாயாவது கொடுங்கள். வேண்டு மானால் என் கான்ட்ராக்டில் ஐந்நூறு ரூபாய் குறைத்துக்கொள் ளுங்கள்'' என்று சொல்லுவாராம். ''பாலாஜி எனக்குச் செய்த உதவி களை நான் சாகும்வரை மறக்க முடியாது'' என்று சொன்னபோது நாகேஷின் கண்கள் கலங்கின. 

எல்லோரையும் சிரிக்க வைக்கும் தான், சொந்த வாழ்க்கையில் சிரிக்கமுடியவில்லை என்கிறார் அவர். அதுவும் இந்த சினிமா வாழ்க்கையின் காரணமாக, சாகும் தறுவாயில் இருந்த தன் தாயாரைக் காணமுடியாமலேயே போய் விட்டதை நினைத்து நினைத்து ஏங்குகிறார். ''இந்தப் போலி வாழ்க்கை அருவருப்பைத் தருகிறது. மனைவியுடன் பேசும்போதுகூட சினிமாவில் நடித்த ஒரு சீன்தான் ஞாபகம் வருகிறது. ஆப்த நண்பனிடம் 'நாளைக்குக் கட்டாயம் ஆறு மணிக்குச் சந்திக்கிறேன்' என்றால், அவன் 'என்னடா, உண்மையா சொல்றயா, இல்லே இதுவும் நடிப்பா?' என்கிறான். எது அசல், எது போலி என்றே புரியமாட்டேங்குது சார்'' என்கிறார் அவர். 

''வாங்குகிற பணத்திற்கு உண்மையாக உழைக்க வேண்டும் என்று நினைக்கிறவன் நான். 'கலையைக் காப்பாற்றுகிறேன்' என்று நான் சொல்லத் தயாராக இல்லை. 'கலைதான் நம்மைக் காப்பாற்றுகிறது' என்று எல்லோரும் நினைத்தால், கலையும் பிழைக்கும்; நாமும் பிழைக்கலாம்'' என்கிறார். 

மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் நடித்ததால், அவர் பெயர் 'தை நாகேஷ்' ஆயிற்றாம். ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றிவிட்டார்களாம். 

நாகேஷூக்கு ஒரே ஒரு ஆசை... 'அமெரிக்கா சென்று நகைச்சுவை நடிகர் ஜெர்ரி லூயியை நேரில் சந்தித்துப் பேச வேண்டும்!'