Sunday, December 21, 2014

தமிழ் சினிமா காட்டும் பார்பன ஆதிக்கம் - ஜீவா படத்தை முன்வைத்து

ஜீவா படத்தை ரொம்பவும் தாமதமாக இப்பொழுதுதான் பார்த்தேன். படத்தின் கதை - பார்பனர்கள் கூட்டம் சேர்ந்து மற்ற ஜாதிக்கார்கள் கிரிக்கெட்டில்நுழைவதை முதுகில் பூணூல் இருக்கிறதா என்று தேடிப்பார்த்து தடுக்கிறார்கள் என்கிறார் டைரக்டர், இவ்வளவுதான் கதை, இது அவருக்கும் தெரிந்துஇருக்கிறது அதனால் தான் முன்பாதி, வளர்ப்புத்தந்தை, காதல்-பிரிதல் - சேர்தல் என்று ஒரு தனிக்கதை.



“ஆதலால் காதல் செய்வீர்” எடுத்த எங்க ஊர்காரரா என்று ஆயாசமாக இருக்கிறது. நெட்டில் தேடியதில் எதிர் குரலோ அல்லது கேட்க்கப்பட வேண்டிய சிலகேள்விகளோ கண்ணுக்குப்படவில்லை. இது தமிழ் கூறும் நல்லுலகிற்க்கு நல்லதல்ல என்பதால் நேரடியாக களத்தில்

இது நாள் வரை பார்பனர்களின் பேச்சு வழக்கும், உடல்மொழியும் அவர்களின் குள்ள நரித்தனங்களும் அவ்வப்போது படத்தில் சில காட்சிகளாகவைக்கப்படும்.

மற்றபடி, அதிககாசுக்கு ஆசைப்படும் மாமாவாகவோ, அப்பர்ட்மெண்டில் குடித்துவிட்டு அல்லது மன நிலை சரியில்லாத ஹீரோவிடம் கேள்விகேட்டுஅசிங்கப்படும் கேரக்டர், வீட்டுக்குள் வராதே என்று வேலைக்காரா பெண்ணை சொல்லும் கொடுர மாமி, இதெல்லாம் பிராமணர்களுக்கென்றே ஒதுக்கபட்டுஇருக்கும் கேரக்டர்கள்,


இதெல்லாம் ஒரளவிற்க்கு புரிகிறது - இருக்கும் சில நிமிடங்களில் ஒரு தனிப்பட்ட குணாதிசியம் இருக்கும் ஒர் கதாபாத்திரத்தைஉருவாக்கிகாட்டுவதுதென்பது அசாத்தியமான, எல்ல திரைக்கதையாளர்களலும் முடிந்த சாகசம் அல்ல எனவே ஏற்கனவே சமுதாயத்தின் மனதில்ஏற்கனவே இருக்கும் ஒரு பிம்பத்தை எடுத்தாள்வது மிகவும் எளிய வழி, அதிலும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் எல்லோரையும் அப்படி பேசிவிடமுடியாது.

ஆனால் சமிபத்தில் ஒரு முழுக்கதையிலும் , பிராமணர்களின் வில்லத்தனத்தை :) பிரதானப்படுத்தி எடுத்த படம் இதுதான். என் சொந்த அனுபவத்தால்எனக்கு இந்தப்படத்தின் பல தளங்களிலும் கேள்விகள்.


முதலில் கிரிக்கெட் அரசியலை பேசுவோம்,

நான் ஒரளவிற்க்கு கிரிக்கெட் விளையாண்டவன் ஆனால் மாவட்டம், தாண்டியதில்லை எனவே மாநில அளவில் என்ன பிரச்சனைகள் என்று தெரியாதுஅதனால் தெரிந்தவர்கள் என்னை நல்வழிப்படுத்தலாம்.

என்னால் இந்த கதையை நம்ப முடியவில்லை. கடந்த 50 வருட கிரிக்கெட்டின் கடவுள்கள், கவாஸ்கரும், சச்சினுமே தங்கள் பிள்ளைகளை கிரிக்கெட்டில்நுழைக்க முடியவில்லை அவர்களுக்கு கிரிக்கெட் உலகில் இல்லாத சக்தியா?

கருணாதியின் கிரிக்கெட் பாசம் அனைவரும் அறிந்தது அவரின் பிரமண துவேஷமும் அனைவரும் அறிந்ததே- அப்படியெல்லாம் அவர் விட்டு விடுவாரஎன்ன? அவர் எந்த அளவிற்க்கு உள்ளிறங்கி பிராமணர்களை களை எடுக்க ஆசைபடுவாறென்றால்:

இரண்டு சம்பவங்கள் -- 1970 களில் அல்லது 80ன் ஆரம்பத்தில், தெரிந்த வக்கீல் குடும்பத்தில் ஒருவர் முனுசீப் கோர்ட் நீதிபதி பதவிக்கு முயற்சிக்கிறார்,தகுதி இருப்பதால் அவர் பெயர் மூன்றுமுறை பரிந்துரைக்கப்படுகிறது, முன்று முறையும் அவர் பெயர் சுழிக்கப்பட்டு “Brahmin select someone else”, என்றுcomment செய்யப்படுகிறது.

இது எப்படி தெரியும் - அப்போது இருந்த இன்னொரு நீதிமான் உறவுக்காரர் அவர் கண்டறிந்து சொல்கிறார், எனவே இவர் இது வேலைக்காதென்று திரைக்கடல் ஓடியும் திரவியம் தேட சென்று விட்டு இப்போது தான் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.

இன்னொரு தெரிந்தவர் , தலைமை செயலகத்தில் பிராமணன் என்பதால், பதவி உயர்வு மறுக்கப்பட்டு கோர்ட்டை நாடி பத்து வருடம் போராடி நிறுபித்து பதவியை பெறுகிறார்

இவ்வளவு ஏன் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் "பிராமணாள் ஹோட்டல்"-- சொந்தக்கடைக்கு பெயர் வைக்க முடிவதில்லை (அவர் அப்படிவைக்கக்கூடாது என்பதுதான் என் கட்சியும்).

தமிழ் நாட்டில் பிராமணன் நிலை இது தான் இப்படி இருக்க இத்தனை கண்கள் நோக்கி இருக்கும் கிரிகெட்டைபிராமணர்கள் ஆள்கிறார்கள் என்பது எந்த அளவிற்க்கு உண்மை என்று தெரியவில்லை.

எனக்குத்தெரிந்த தனிப்பட்ட முறையில்; தெரிந்த கதைகளும் இப்படி இருக்கிறது, தெரிந்தவர் "அய்யங்கார்" கிரிக்கெட் பித்தால் அலைகழிக்கப்பட்டு 35 வயதில் எங்களுருக்கு மிகவும் சாதாரண வேலைக்கு வருகிறார். கதை - ஸ்ரீனி மாமாஅவரை "நீ என் கம்பெனிக்கு ஆடு வேலை தரேன் என்று உபயோகப்படுத்திக்கொண்டு விரட்டிவிட்டார்".



நமக்கு எல்லாம் தெரிந்த இன்னொரு "அய்யங்கார்" சடகோபன் ரமேஷ், TA சேகரிடம்(இவரிடம்தான் தமிழ்நாட்டின் கிரிகெட் அதிகாரம் இருக்கிறது என்றுவிஷயம் தெரிந்தவர்கள் சொல்வார்கள்) முறைத்துக்கொண்டதால் இவர் இப்போது தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார்



எனவே கிரிகெட்டை பணம் ஆள்கிறது அல்லது ஸ்ரீனி மாமா போன்றவர்கள் ஆள்கிறார்கள் என்றால் ஒத்துக்கொள்ளலாம், ஜாதி அதுவும் பிராமண ஜாதிஆள்கிறது என்றால், சிரிப்புத்தான் வருகிறது.


படத்தின் டைரக்டருக்கு தனிப்பட்ட முறையில் பிராமண ஜாதி மேல் எந்த வெறுப்பும் கிடையாது என்றுதான் தோன்றுகிறது , படத்தில் SPB ஒரு முக்கியமானபாடலை பாடி இருக்கிறார் அதுவும் டைரக்டர் அவர் பெயர் படத்தில் இருந்தே ஆகவேண்டும் என்று SPB யிடம் வறுற்புறுத்தி பாடவைத்ததாக பேட்டியில்சொல்கிறார் விசாரித்தால் இன்னும் நூறு பிராமணர்கள் படத்தில் வேலை செய்து இருக்க கூடும், அவர்கள் சினிமாவில் அதிகம் என்று கேள்வி.

ஆதலால் என் யூகம் எனவென்றால்,தமிழ் சமுகத்தின் பொது நம்பிக்கையான பிராமண ஆதிக்க வெறுப்பு கைகொடுக்கும் என்று நம்பி இருக்கிறார் -நம்பிக்கை வீண்போகவில்லை..


ஆனால் உண்மையில் தமிழ் நாட்டில் பிராமண ஆதிக்கம் இன்னும் இருக்கிறதா? தமிழ்நாட்டில் பிராமண ஆதிக்கம் என்பது ஒர் கவனகலைப்பு மட்டுமே.


எனக்கென்னவோ, பெரும்பாலான வெளிநாட்டினர் இன்னமும் இந்தியாவை பாம்பாட்டிகளின் நாடு என்று நினைப்பதை போல எப்போதோ மனதில்தங்கிவிட்ட ஒன்று என்றுதான் தோன்றுகிறது. இப்போதெல்லாம் அரசு அலுவலகங்களிலோ அல்லது பாங்குகளிலோ கவனித்தால் அப்படி ஒன்றும்பிராமண கூட்டம் இருப்பதாகத்தொரியவில்லை.


வக்கீல் தொழிலிருந்து முழுமையாகவே வெளியேறி விட்டார்கள், பிராமண டாக்டர்களும் அதிகம் தமிழ் நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.அரசியலில் சுத்தமாகவே இல்லை என்று சொல்லிவிடலாம்.(ஜெயலலிதா, சோ அல்லது சுப்பிரமணியன் சுவாமியைத் தவிர வேட்பாளர் தகுதியில்உங்களுக்கு வேறு யாரையாவது தெரியுமா?)


இப்போதெல்லாம், வீரமணியோ அல்லது கலைஞரோ எதையாவது, இது பூணுல் அணிந்தவர்களின் சதியென்றால், மக்களே கிண்டல்செய்யத்தொடங்கிவிடுகிறார்கள். ஆதிக்க சாதி என்பது பிராமணர்கள் மட்டுமல்ல, மற்றவர்கள் பிராமணர்களை முன்னிறுத்தி மறைந்து கொள்கிறார்கள்என்பது கொஞ்சம் பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது.


உண்மையில் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருக்கும் அல்லது கிட்டத்தட்ட அரசியல் அதிகாரமே இல்லாமலிருக்கும் பிராமணர்கள் ஆதிக்கத்தால்மற்றவர்கள் அழிகிறார்கள் என்று வந்து இந்த படம் ஜெயித்திருப்பதால் அடுத்தது இதே ரீதியில் குறைந்தபட்சம் 10 படமாவது வரும், அதில் ஒன்று ஐடி யில்பிராமணர்கள் எப்படி மற்றவர்களை அழிக்கிறார்கள் என்று வரும்..


Krish Texas

by IdlyVadai

Friday, December 19, 2014

சாரு பதில்கள்--அந்திமழை

கேள்வி: 'The angst of the Tamil brahmin: Live and let live' என்று Times of India-வில் வெளியான பத்ரி சேஷாத்ரியின் கட்டுரையை எப்படிப் பார்க்கிறீர்கள். அதனுடன் ஒத்துப் போகிறீர்களா ? 
கட்டுரையின்லிங்க் ;
http://timesofindia.indiatimes.com/city/chennai/The-angst-of-the-Tamil-brahmin-Live-and-let-live/articleshow/4540815
-உமா மகேஸ்வரன்
பதில்: ஏற்கனவே இது பற்றி பத்ரி சேஷாத்ரியை ஒத்தே எழுதியிருக்கிறேன்.  அவர் அந்தக் கட்டுரையில் சொல்லியிருப்பது அவ்வளவும் இன்றைய எதார்த்தம்.  என்னுடைய நண்பர் ஒருவர் பல ஆண்டுகளாக சினிமா துறையில் உதவி இயக்குனராக இருக்கிறார்.  சமீபத்தில் அவர் என்னிடம் கொஞ்சம் தயவான குரலில், “யாரிடமும் நான் ப்ராமின் என்று சொல்லி விடாதீர்கள்” என்றார்.  உண்மைதான்.  இன்று சினிமா துறையில் ஒருவர் பிராமணர் என்று சொல்லிக் கொண்டு இயங்க முடியாது.  சினிமா துறை மட்டும் அல்ல; எந்தத் துறையிலும் தமிழ்நாட்டில் ஒரு பிராமணனுக்கு வேலை இல்லை.  முப்பதுகளிலிருந்தே பிராமணர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறத் துவங்கி விட்டார்கள்.  சந்தேகமின்றி இது Exodus தான்.  முன்பு பம்பாய், தில்லி என்று போனார்கள்.  இன்று அமெரிக்கா.  
தமிழ்ச் சமூகத்தில் அதிக அளவு வெறுக்கப்படும் சாதியினராக தலித்துகளும் பிராமணர்களும் இருக்கின்றனர்.  இன்றும் பல கிராமங்களில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் உள்ளது.  தலித்துகளை கோவிலுக்குள் அனுமதிக்காத பல கிராமங்கள் உள்ளன.  சமூகத்தில் எவ்வளவு உயர்ந்த இடத்துக்கு வந்தாலும் சமூகம் தரும் அவமரியாதையைத் தாங்கிக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் தலித்துகள்.  ஆனால் தலித்துகளுக்கு இருக்கும் சட்டப் பாதுகாப்பு கூட இல்லாதவர்களாக இருக்கிறார்கள் பிராமணர்கள்.  கடந்த நூறு ஆண்டுகளாக பிராமண சமூகத்தைப் போல் வெளிப்படையாகத் தூற்றப்பட்ட, துவேஷிக்கப்பட்ட, கேலி கிண்டலுக்கு ஆளாக்கப்பட்ட சமூகம் தமிழ்நாட்டில் வேறு எதுவும் இல்லை.  தமிழ் சினிமாவில் பிராமணர்களைக் கிண்டல் செய்வதும் அவதூறு செய்வதும் மிகவும் சகஜமான, எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட விஷயமாக இருக்கிறது.  வேறு எந்த சாதியைப் பற்றியும் இவர்கள் இப்படிப் பேச முடியாது.  பேசினால் நாக்கு இருக்காது.  அப்படிப் பேசக் கூடிய சாத்தியமே இங்கு இல்லை.  சுஜாதா ஒரு தொடர்கதையில் ஒரு சாதிப் பெயரைக் குறிப்பிட்டு எழுதியவுடன் கிளம்பிய எதிர்ப்பில் அந்தத் தொடர்கதையே நிறுத்தப்பட்டது.  ஆனால் விஸ்வரூபம் என்ற படத்தில் கமல்ஹாசன் ஒரு பெண்ணிடம், “பாப்பாத்தி சிக்கனை டேஸ்ட் பண்ணி சொல்லு” என்று படு சாதாரணமாகச் சொல்ல முடிகிறது.  அதேபோல் அவருடைய பேட்டிகளிலும் பார்ப்பனர் என்றே குறிப்பிடுகிறார்.  தலித் பெண்ணையோ, வேறு எந்த சாதியையோ பற்றி இப்படி அவர் குறிப்பிட முடியுமா?  தலித்துகளின் சாதியைக் குறிப்பிட்டுத் திட்டினால் சட்டப்படி குற்றம் என்கிற போது பிராமணர்களை மட்டும் திட்டலாமா?  திட்டலாம்.  கேட்பதற்கு யாரும் இல்லை என்பதுதான் தமிழ்நாட்டின் நிலை.  கமல் மட்டும் அல்லாமல் எல்லா முற்போக்கு பிராமணர்களுமே பார்ப்பனர் என்றே குறிப்பிடுகின்றனர்.  பிராமணர் என்று சொல்லி விட்டால் எங்கே தங்களுடைய முற்போக்கு அடையாளம் கலைந்து விடுமோ என்று அஞ்சுகிறார்கள்.  
 
என் மனைவி ஒரு பிராமணப் பெண் என்பதால் முதல் சந்திப்பிலேயே என் தாயார் அவளை அவமதித்தார்.  ”ஒரு பாப்பாத்தியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டியே?” என்று அவள் முன்னாலேயே கேட்டார்.  தொடர்ந்து இப்படியே அவளை அவமானப்படுத்தி வந்ததால் என் பெற்றோரை ஏழு ஆண்டுகள் நான் சந்திக்காமலேயே இருந்தேன்.  நான் வேறு எந்த சாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருந்தாலும் இந்த அவமரியாதை நடந்திருக்காது.  தலித் பெண்ணைத் தவிர என்பதையும் இங்கே ஞாபகத்தில் கொள்ளவும். தலித்துகளையும் பிராமணர்களையும் இந்த சமூகம் எப்படி நடத்துகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம்.  அதிலும் குறிப்பாக அந்த இரண்டு சாதிகளைச் சார்ந்த பெண்களின் ஒழுக்கம் பற்றி சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகள் மிக மோசமானவை.  மெத்தப் படித்தவர்களே அப்படித்தான் கருதுகின்றனர்.  அம்மா வந்தாளில் தி. ஜானகிராமனே எழுதி விட்டார் என்று சொன்ன பலரை நான் பார்த்திருக்கிறேன்.  தஞ்சாவூரில் நான் கல்லூரியில் படித்த காலத்தில் பிராமணப் பெண்களைப் பற்றி நிலவிய கட்டுக் கதைகளுக்குப் பஞ்சமே இல்லை.  
 
தங்களுக்கு எதிராக சமூகத்தில் நிலவும் துவேஷத்தை பிராமணர்கள் எதிர்கொண்டது எப்படியெனில் – அவர்கள் அதற்கு எதிராகப் போராடுவதைத் தவிர்த்து விட்டுத் தங்களின் வாழ்விடங்களை மாற்றிக் கொண்டனர்;  தங்களை துவேஷித்த சமூகத்தையும் அந்தச் சமூகத்தின் மொழியையும் அந்தச் சமூகம் வாழ்கின்ற நிலவெளியையும் முற்றாகப் புறக்கணித்தனர்.  தமிழுக்குப் பதிலாக ஆங்கிலத்தையும், தமிழ்நாட்டுக்குப் பதிலாக அமெரிக்காவையும் சுவீகரித்துக் கொண்டனர். 
 
தமிழை வளர்த்ததாக திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சொல்லித் திரிந்தாலும் அவர்களுடைய ஆட்சியில் தான் தமிழ் அழிந்தது.  கடந்த முப்பது ஆண்டுகளில் மெல்ல மெல்ல தமிழ் பேச்சு மொழி ஆனதற்கு திராவிடக் கட்சிகளே காரணம்.  மாறாக, பிராமணர்கள் இதுவரை தமிழை வளர்த்தே வந்திருக்கின்றனர்.  உ.வே.சாமிநாதைய்யர் இல்லாவிட்டால் இன்று சங்கத் தமிழ் இலக்கியமே கிடைத்திருக்காது.  தமிழ் வேதம் என்று கருதப்படும் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் ஆழ்வார்கள் நமக்கு அளித்த சொத்து.  அவர்களைப் போல் தமிழ் வளர்த்தவர்கள் யார்?  இன்றளவும் பெருமாள் கோவில்களில் திவ்யப் பிரபந்தத்தைப் பாடிப் பாடித்தான் தமிழ் வளர்க்கிறார்கள் பிராமணர்கள்.  மேடைகளில் தமிழ் தமிழ் என்று வாய் கிழியக் கத்தும் திராவிடக் கட்சிகளின் அரசியல்வாதிகள் தமிழுக்கு எதுவுமே செய்யவில்லை என்பதோடு மட்டும் அல்லாமல் தமிழ் இன்று பேச்சு மொழியாகி விட்டதற்கும் அவர்களே காரணம்.  
 
இன்று தமிழ்நாட்டில் சாதியைப் பேணுகின்றவர்கள் இடைநிலைச் சாதியினர்தாம்.  இடைநிலைச் சாதிகளால்தான் இன்று சமூகத்தில் சாதி உணர்வு மீண்டும் கடுமையான முறையில் தலை தூக்கியிருக்கிறது.   இன்னொரு முக்கியமான விஷயம், தலித்துகள் மீதான வன்முறையைக் கட்டவிழ்த்து விடுபவர்களும் இந்த இடைநிலைச் சாதியினராகவே இருக்கின்றனர்.  சாதி வன்முறையில் பிராமணர்கள் ஈடுபடுவதே இல்லை.  அவர்கள் சாதீய ஒடுக்குமுறையிலிருந்து வெளியே போய் விட்டனர்.  
 
பிராமணர்கள் உடல் உழைப்பில் ஈடுபடுவதில்லை என்று ஒரு தவறான கருத்து வேறு சமூகத்தில் நிலவுகிறது.  கோவில்களில் பணி புரியும் அர்ச்சகர்களின் நிலை வயலில் நின்று வேலை பார்க்கும் குடியானவர்களின் நிலையை விட மோசமானது.  நாள் முழுவதும் அக்கினிக்கு (தீபாராதனை) அருகிலேயே நின்று அவர்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது.  ஏழு எட்டு மணி நேரம் அவர்கள் சிறுநீர் கழிக்கக் கூட வெளியே போக முடியாமல் அவஸ்தைப் படுகின்றனர்.  போனால் விக்ரகங்களின் மீது உள்ள விலை மதிக்க முடியாத ஆபரணங்கள் திருடு போய் விடும்.  இதேபோல் சவுண்டிப் பிராமணர்களின் நிலையும் மிகவும் துயரமானது.  
 
கடைசியாக, ஒவ்வொரு சாதிக்கும் அவர்களுக்கான குல வழக்கம், வழிபாடு, சடங்குகள், பேச்சு மொழி என்று பலவிதமான கலாச்சார அடையாளங்கள் இருக்கின்றன.  அதேபோல் தான் பிராமணர்களுக்கான பேச்சு மொழியும், வழிபாடும், சடங்குகளும், குல வழக்கங்களும்.  ஆனால் தமிழ்நாட்டில் நிலவும் பிராமணத் துவேஷத்தினால் அவர்களின் கலாச்சார அடையாளங்கள் இன்று காணாமலே போய் விட்டன.  அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.  
 
இன்னொரு முக்கிய விஷயம்.  தலித்துகள், பிராமணர்களைப் போல் இஸ்லாமியர்களும் வெறுத்து ஒதுக்கப்படுகிறார்கள்.  அந்த வெறுப்பு சமயங்களில் வெளிப்படையாகவும் பல சமயங்களில் மறைமுகமாகவும் அவர்கள் மீது பிரயோகிக்கப்படுகிறது.  
--அந்திமழை

எம்.ஜி.ஆர். + தேவர் + நான் = சினிமா, சாப்பாடு


எம்.ஜி.ஆர். + தேவர் + நான் = சினிமா, சாப்பாடு

கோடம்பாக்கத்தின் சினிமா கோட்டையில் நானும் ஒரு சிறிய சிப்பாயாக குடிபுகுந்த 1953-1954-களில், சென்னையில் அந்தந்த பகுதிகளில் சொற்ப தியேட்டர்களே இருந்தன.
அவை:-

மவுண்ட் ரோட்டின் மையப்பகுதியில் 'கெயிட்டி', 'கேஸினோ', 'சித்ரா', 'நியூகுளோப்', 'வெலிங்டன்', 'நியூ எல்பின்ஸ்டன்', 'மிட்லேண்ட்', 'ஓடியன்', 'பிளாஸா', 'பாரகன்', திருவல்லிக்கேணியில் 'ஸ்டார்', பிராட்வேயில் 'பிராட்வே', 'பிரபாத்', 'மினர்வா', வால்டாக்ஸ் ரோட்டில் 'ரீகல்', தங்கசாலையில் 'கிரவுன்', 'கிருஷ்ணா', டவுனில் 'ஸெலக்ட்', 'கினிமா சென்ட்ரல்' என்னும் 'ஸ்ரீமுருகன் டாக்கீஸ்', வண்ணாரப்பேட்டையில் 'பாரத்', 'மகாராணி', 'மகாராஜா', புரசைவாக்கத்தில் 'ராக்ஸி', கெல்லிஸில் 'உமா', அயனாவரத்தில் 'சயானி', மயிலாப்பூரில் 'கபாலி', காமதேனு' மற்றும் தியாகராயநகரில் பிரபல நடிகை டி.ஆர்.ராஜகுமாரிக்குச் சொந்தமான 'ராஜகுமாரி', சைதாப்பேட்டையில் 'நூர்ஜஹான்'.

இவை அத்தனை தியேட்டர்களிலுமே அக்காலத்தில் நான் படம் பார்த்திருக்கிறேன். பிற்காலத்தில் நான் எழுதிய பல படங்கள் இவற்றில் ஓடியிருக்கின்றன. அந்தப்பழைய நினைவில்தான் இன்று இதைக் குறிப்பிடுகிறேன்.

பிராட்வே நீள்சாலையின் வடகோடியில் அமைந்துள்ள 'பிராட்வே' டாக்கீஸில் (இப்பொழுது 'நியூ பிராட்வே') தான், இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜபாகவதர், டி.ஆர்.ராஜகுமாரியுடன் இணைந்து நடித்த 'ஹரிதாஸ்' படம் ரிலீசானது. 16.10.1944 தீபாவளித் திருநாளில் வெளிவந்த இந்தப் படம் 1944, 1945, 1946 ஆகிய மூன்று ஆண்டுகளின் 3 தீபாவளிகளைக் கடந்து, அடுத்த 1947 ஆண்டிலும் மேற்கொண்டு 6 வாரங்கள் வெற்றிகரமாக ஓடியது. மொத்தம் 110 வாரங்கள்!. நாள் கணக்கில் கூட்டிப் பார்த்தால் 772 நாட்கள்!. தினசரி மூன்று காட்சிகளும் தொடர்ந்து இடைவிடாமல் ஓடி, தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் இன்றுவரை வேறு எந்த மொழி திரைப்படமும் புரியாத பெரும் சாதனை. இது தமிழ் சினிமாவிற்கு எம்.கே.தியாகராய பாகவதர் ஏற்படுத்திவிட்டுச் சென்ற பெருமிதத்திற்குரிய பெருமை என்று கூறினால், அது மிகை ஆகாது. அத்தகைய அற்புத இசை - நடிப்புக் கலைஞருக்கு, இந்த சென்னை மாநகரின் எந்த ஓர் இடத்திலும் இன்று வரையில் நினைவு மண்டபமோ, உருவச்சிலையோ அமைக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

அதே பிராட்வே சாலையின் நடுப்பகுதியில் ஒரு பழைய கட்டிடத்தின் மேல் தளத்தில், 'மினர்வா' தியேட்டர் இருந்தது. இங்கு ஆங்கில மொழிப்படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. அக்கால ஆங்கிலேய அரசு அதிகாரிகள் தமது குடும்பத்தினர் மற்றும் குறிப்பிட்ட நண்பர்களுடன் கூடி, விருந்துண்டு ஆடிப்பாடி மகிழ்வதற்கென அமைத்திருந்த பிரத்தியேகக் கூடத்தில் இந்த தியேட்டர் இருந்தது.

அன்றைய நாட்களில் சென்னையில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலேயே முதல் குளிர்சாதன வசதி அமைக்கப்பட்ட முதல் தியேட்டர் இந்த 'மினர்வா'தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குதான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட அனைத்துத் திரைப்படங்களையும் தணிக்கை அதிகாரி (சென்சார் ஆபீசர்) தம் உறுப்பினர்களுடன் பார்த்து கலந்தாலோசனை செய்து தணிக்கை செய்தார். அன்றைய தணிக்கை விதிமுறைகள் மிகக் கடுமையானவையாக இருந்து அவை பாரபட்சம் இன்றி கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்பட்டன!

மவுண்ட்ரோடு 'நியூகுளோப்' தியேட்டரில் அக்கால மாபெரும் உலக மகா இயக்குனரான 'ஸிஸில்-பி-டிமிலியின் பைபிளைச் சார்ந்த 'பத்துக் கட்டளைகள்' என்னும் 'டென்கமாண்மென்ட்ஸ்' படம் ஒரு வருடமாக ஓடிக்கொண்டேயிருந்தது! 'ஓடியன்' தியேட்டரில் 'பென்ஹர்' என்ற படம் மாதக்கணக்கில் ஓடியது.

ஆங்கில மொழிப்படங்கள் காண்பிக்கப்படும் தியேட்டர்களில் அமர்ந்து அமைதியாகப் படம் பார்ப்பது கவுரவமாகக் கருதப்பட்ட காலம் அது!

1956-1957-களில் அமரர் 'சாண்டோ' எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரின், 'தேவர் பிலிம்'சில் நான் கதை வசன கர்த்தாவாகச் சேர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். அந்தக் காலக்கட்டத்தில் அண்ணன் ஓய்வின்றி ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்தார். ஆனாலும் கூட, ஒவ்வொரு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்திப் படங்களையும் தவறாமல் பார்க்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். ஆங்கிலப் படங்களில் பெரும்பாலும் 'ஆக்ஷன்' வீரதீரச் செயல்களைக் கொண்ட படங்களையே அதிகம் விரும்பிப் பார்ப்பார். பெரிய அளவில் கல்வி அறிவு பெறாவிட்டாலும், இயற்கையாகவே அவர் நல்ல கதை அறிவு கொண்டிருந்தார். அதை வைத்து மற்ற படங்களின் வெற்றி தோல்விகளுக்கான காரணங்களை ஆராய்ந்தறிந்து, அதற்கேற்றவாறு படம் பண்ணி தொடர்ந்து வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணமுடையவராய் இருந்தார்.

அவ்வப்போது படம் பார்க்க அவருக்கு நேரம் கிடைப்பது அரிது. ஆகையால், இடையில் ஓய்வு கிடைக்கும் சமயத்தில் ஒரே நாளில் சேர்ந்தாற்போல பிற தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிப் படங்களையும் பார்த்துவிடுவார். துணைக்கு என்னையும் அழைத்துக்கொண்டு போவார்.

அப்பொழுது அவருக்கு வயது 41. எனக்கு 25. நாங்கள் இருவருமே நல்ல சாப்பாட்டுப் பிரியர்களாக இருந்தோம் - அல்ல, அமைந்தோம். அதிலும் குறிப்பாக அசைவ உணவு வகையறாக்களில் அதிகக் கவனம் செலுத்துவோம். அதற்குத் தக்கவாறு இளமையும், ரத்த ஓட்டமும் இருந்தது. ஆகவே, படம் பார்த்தல், சாப்பிடுதல் ஆகிய இரண்டையும் ஒன்றாக இணைத்துக்கொண்டு ஓர் இனிய இளங்காலை வேளையில் காரில் தியாகராயநகரில் இருந்து புறப்படுவோம்.

முதல் போணியாக தென் பகுதி பனகல்பார்க் எதிரில் நீண்ட நாட்களாக இருந்து வந்த 'பார்க்லேண்ட் ஓட்டலில்' அடிவைப்போம். (அந்த ஓட்டல் இருந்த இடத்தில் இன்றைக்கு 'நல்லி' நகைக்கடை இருக்கிறது). இரண்டு பெரிய ஸ்பெஷல் மசாலா தோசைகள். மற்றும் காலி பிளவர், கேரட், பீன்ஸ் குருமாவுடன் கூடிய இரண்டு செட் சப்பாத்திகள் அல்லது 4 பூரிகள். அவற்றுடன் சேர்ந்தாற்போல் இரண்டு கப், பில்டர் காபி (அண்ணனுக்கு ஒரு கப் காபி போதாது). இவை அவருடைய 'பிரேக் பாஸ்ட்' என்னும் காலை ஆகார 'மெனு'. அவற்றில் பாதி அளவு என்னுடைய 'மெனு'. சாப்பிட்டு முடித்ததும் அண்ணன் அவருடைய காரில் அமர்ந்து, எவர்சில்வர் வெற்றிலைப்பெட்டியைத் திறந்து தாம்பூலம் தரித்துக் கொள்வார்!

அவர் எந்த அறிவிப்பும் கூறாமலே, அவரது ஆஸ்தான சாரதி காரை வடக்குக் கடற்கரைச் சாலையில் செலுத்துவார். அது ராயபுரத்திற்குச் சென்று ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய 'பிரைட்டன்' தியேட்டருக்கு முன்னால் நிற்கும். அண்ணன் வந்திருப்பதை கார் டிரைவர் கூறியதும், தியேட்டர் மானேஜர் ஓடிவந்து அழைத்துச் சென்று பால்கனியில் அமர்த்துவார்.

பிரைட்டனில் 'மார்னிங் ஷோ' ஆங்கிலப்படம் பார்த்து முடித்ததும், அதைப்பற்றி விமர்சனம் செய்து கொண்டே காரில் மவுண்ட் ரோட்டுக்கு வந்து சேர்வோம். 

இன்றைய 'புகாரி' ஓட்டலின் மேற்கே அதே வாடையில் அன்றைக்கு இருந்த ஆங்கிலேயர் காலத்து 'ஹாரிஸன் பிரிஸ்டால்' ஓட்டலுக்கு செல்வோம். அங்கு அப்பொழுது பிரசித்தமான வாவல் மீன் குழம்பு, வஞ்சிர மீன் வறுவல் மற்றும் 'டீப் பிரை' செய்யப்பட்ட இறால் கறி சகிதம் மதிய உணவை முடிப்போம். அடுத்ததாக 'மிட்லேண்ட்' அல்லது திருவல்லிக்கேணி ஸ்டார் டாக்கீசுக்குச் சென்று ஏதாவது ஒரு இந்திப்படம் 'நூன்ஷோ' பார்த்துவிட்டு, மாலை 5.30 மணிக்கு மீண்டும் மவுண்ட் ரோடு சென்டருக்கு வருவோம்.

பிரிட்டிஷ் காலத்து 'விக்டரி ஹவுஸை' அடுத்து தென்புறத்தில் அந்நாளில் 'நேரு கபே மை காபி பார்' என்ற பெயரில் புகழ் பெற்ற சைவ ஓட்டல் இருந்தது. வாழைக்காய், கத்தரிக்காய், குடை மிளகாய், பெல்லாரி வெங்காயம் முதலியவற்றை கச்சிதமாக நறுக்கி பெருங்காயம் கரைத்த கெட்டியான கடலை மாவுக் கலவையில் முக்கி எடுத்து, சுத்தமான எண்ணெயில் இட்டுப் பக்குவமாக வேக வைத்த 'பஜ்ஜி' வகையறாக்கள் சுவையாகவும், சுடச்சுடவும் மாலை வேளைகளில் அங்கு கிடைக்கும்.

அவற்றை வகைக்கு ஒன்றாக (அண்ணன் மட்டும் இரண்டு இரண்டாக) தின்று தீர்த்து வழக்கம்போல அவருக்கு இரண்டும் எனக்கு ஒன்றுமாக மூன்று கப் காபி அருந்தி முடிப்போம். பின்னர் அருகில் இருக்கும் தமிழ்ப்படங்கள் மட்டும் ஓடுகின்ற தியேட்டர்களில் ஏதேனும் ஒன்றில், ஏற்கனவே நாங்கள் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் இரண்டு தமிழ்ப்படங்களில் ஒன்றை 'ஈவினிங் ஷோ' பார்ப்போம். படம் முடிந்ததும் மீண்டும் மவுண்ட் ரோடு மையத்திற்கு கார் வந்து சேரும். அங்கு'புகாரி' அல்லது அதை அடுத்து சற்றுத்தள்ளி மேற்புறத்தில் அன்றைக்கு இருந்த 'நேஷனல் இ.ராணி' ஓட்டலில் நுழைவோம். அங்கு அசல் நாட்டுக்கோழி, முட்டை, மட்டன் மசாலாவுடன் கூடிய முழு பிளேட் பிரியாணியை அண்ணனும், அதில் அரை பிளேட் நானும் சாப்பிட்டு அதற்கு மேலே ஸ்பெஷல் டீ அருந்துவோம்.

இன்றைக்கு 150-லிருந்து 200 ரூபாய் வரையில் விற்கப்படும் ஒரு முழு பிரியாணியின் அளவு ,அன்றைக்கு அரை பிளேட்தான்! அதன் விலை எவ்வளவு தெரியுமா?. பத்தே பத்து ரூபாய்தான்! அன்றைய நாளில் 5 ரூபாய்க்கு கால் பிளேட் பிரியாணியும் கொடுப்பார்கள்!

பிரியாணி டின்னர் முடிந்ததும் இரண்டாவது தமிழ்ப்படத்தை 'நைட்ஷோ' பார்த்துவிட்டு நள்ளிரவில் காரில் வந்து அமர்வோம். 'ரிமோட் கண்ட்ரோல்' இயக்கம் போல, டிரைவர் விசுவநாதன் காரை அன்றைய சைனா பஜாரைச் சார்ந்த சவுகார்பேட்டைச் சந்திப்பில் கொண்டு போய் நிறுத்துவார்.

அங்கு 'சீனிவாசா பவன்' என்ற பெயரில் புகழ் பெற்ற ஒரு திறந்தவெளி சைவ உணவு விடுதி இருந்தது. அங்கு விடியும் வரையில் வியாபாரம் நடக்கும். நடுத்தெருவை அடைத்து விசுப் பலகைகளும் அவற்றின் எதிரே விட்டுவிட்டு மடக்கு மரப்பலகையினால் ஆன சிறுசிறு மேஜைகளும் போட்டு வைத்திருப்பார்கள். பெரும்பாலும் 'மார்வாரி' இனத்தவர்தான் அமர்ந்தபடியும், ஆங்காங்கே நின்றபடியும் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

பெரிய பெரிய இரும்புக் கொப்பரைகளில் சொட்டுத் தண்ணீர் கலக்காத சுத்தமான பசும்பால், தள தளவென்று கொதித்துக் கொதித்துப் பாலாடையுடன் கூடி 'பாஸந்தி'யாகத் திரண்டு புரண்டு கொண்டிருக்கும். அதை அப்படியே பெரிய பெரிய பீங்கான் கிண்ணங்களில் அள்ளி, அதில் பன்னீர் தெளித்து அதனுடன் சர்க்கரை, ஏலக்காய், பாதாம், முந்திரி, திராட்சை கலந்து சுடச்சுட தருவார்கள். கூடவே பூரி அல்லது சப்பாத்தியும் உண்டு.

பெரும் செல்வந்தர்களான சவுக்கார்கள் நிறைய சப்பாத்திகளை ஒரு தட்டில் அடுக்கி வைத்துக்கொண்டு, ஒவ்வொன்றாக எடுத்து அதை இரண்டு இரண்டாகப் பிய்த்துக்கொண்டு ஒரு பாதியை பாஸந்தியில் அழுத்தி, முடிந்த மட்டும் வாயை அகலமாகத் திறந்து கொண்டு அதன் உள்ளே வைத்து சிறிதும் சிந்தாமல் கொள்ளாமல் சுவைத்து மகிழ்வார்கள்.

இது போதாமல் இன்னொரு கொப்பரையில் பொன் மஞ்சள் வண்ணத்தில் 'தேன் ஜிலேபி' வெந்து பளபளவென்று சவரன் காசு போல மின்னிக்கொண்டிருக்கும். அதில் ஒரு டஜன் ஜிலேபியை வாங்கி வைத்துக்கொண்டு அதன் ருசியை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். இவை மட்டும் அல்லாமல் கெட்டியான 'பால்கோவா', வெண் பஞ்சு வண்ண 'ரசகுல்லா', 'மில்க் அல்வா' என பாலில் உருவான பல்வகை அயிட்டங்களுக்கும் அங்கு பஞ்சமில்லை.

எனது அன்பிற்கினிய தேவரண்ணன் சிறிதும் வஞ்சகம் இல்லாமல் அரை டஜன் சப்பாத்திகளைத் தட்டில் அடுக்கி வைத்துக்கொண்டு, அதன் மீது இரண்டு கப் பாஸந்தியை தோசை மீது சாம்பார் ஊற்றுவதைப்போல ஊற்றி ஊற வைத்துப் பிட்டுப்பிட்டுச் சாப்பிடுவார். வயிறு நிறையவில்லை என்று மனதிற்குத் தோன்றினால், மீண்டும் கால் டஜன் சப்பாத்தியுடன் ஒரு கப் பாஸந்தி!.

ஒரு காலத்தில் 'எலிபண்ட்கேட்' என்னும் 'யானைக்கவுனி'ப் பகுதியில் வசித்த எம்.ஜி.ஆருக்கு இந்த சீனிவாசா பவன் விடுதியைப்பற்றி நன்கு தெரியும். அவர் சொல்லித்தான் எங்களுக்கு இந்த இடம் தெரிந்தது. இரவு நேரப் படப்பிடிப்பு நாட்களில் எம்.ஜி.ஆர். இங்கிருந்து வேண்டிய அயிட்டங்களை வாங்கி வரச்செய்வார். அதை அண்ணனும், அவரும் போட்டிப் போட்டுக்கொண்டு உண்டு மகிழ்வார்கள். இந்தப் பூரி சப்பாத்தி பாஸந்தி 'காம்பினேஷன்' எம்.ஜி.ஆரின் விருப்ப உணவு!

தேவரண்ணனும், நானும் நள்ளிரவு உணவை, சவுகார் பேட்டை சீனிவாசா பவனில் முடித்துக்கொண்டு, அங்கிருந்து சற்றுத் தொலைவில் இருந்த 'ஐகோர்ட் பீச்'சுக்கு வருவோம். அந்நாட்களில் இன்றைய 'மெரினா பீச்' உயர்நீதிமன்றத்தின் பின்புறம் வரையில் நீண்டிருந்தது. பின்நாளில் துறைமுகத்தின் விரிவாக்கத்தின்போது அந்த அழகிய கடற்கரையைக் கட்டிடங்கள் ஆக்கிரமித்துக்கொண்டு விட்டன.

அண்ணனும் நானும் கடற்கரை மணலைச் சேர்த்துக் குவித்துத் தலையணைபோல் ஆக்கி அதன் மீது துண்டை விரித்துப் படுப்போம். பழைய குளிர் தென்றல் மயில் இறகால் தடவுவதுபோல மெதுவாக மேனியைத் தடவித் தவழும். ஒரே நாளில் நான்கு படங்களைப் பார்த்துச் சோர்ந்து போன விழிகளை உறக்கம் தழுவி ஆட்கொண்டு விடும்.
 
எங்களைப்போன்று ஆங்காங்கே வடசென்னைவாசிகள் பாய் தலையணை சகிதம் படுத்து குறட்டை விட்டு உறங்குவார்கள். கேட்பார் கிடையாது; இப்பொழுது போல வழிப்பறி, திருட்டு கிடையாது. காவல் துறையினரின் கண்காணிப்பு சட்ட திட்டங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு, அனைத்துக் கடற்கரைகளும் அழுக்கும் இழுக்கும் இல்லாமல் அழகாகவும், அமைதியாகவும் திகழ்ந்தன!

வைகறைப் பொழுதில் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அடர்ந்த மரக்கிளைகளில் கட்டப்பெற்ற கூடுகளில் இருந்து பல்வேறு 'பட்சிகள்' எழுப்பும் இன்னொலி கேட்டு அண்ணனும், நானும் விழித்தெழுவோம். கீழ்த்திசை தங்கவானம் பிரசவிக்கும் குங்குமக் குழந்தையைக் கண்டு கைகுவித்துக் கும்பிட்டு விட்டு தியாகராய நகருக்குத் திரும்புவோம்.

படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரிடம் இந்த விவரங்களைத் தெரிவிப்பேன். "கொடுத்து வச்சிருக்கீங்க. கோடி கோடியா சம்பாதிச்சுக் கொடிகட்டிப் பறந்தாலும், எல்லாருக்கும் இந்தப் பாக்கியம் கிடைக்காது" என்று கூறி தனக்குத்தானே ஆதங்கம் கொள்வார்.

1960-களில் நான் ஏவி.எம். படங்களுக்கு எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது படப்பிடிப்பு இல்லாத நாட்களில், 'முருகன் பிரதர்ஸ்' என்று அழைக்கப்பெற்ற செட்டியாரின் பிள்ளைகளான மூத்தவர் முருகன், அவரை அடுத்த குமரன் மற்றும் சரவணன் ஆகியோருடன் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் - நான் எல்லோருமாகச் சேர்ந்து வெளியில் செல்வோம். பாரிஸ் கார்னரின் கீழ்த்திசை முனையில் இருந்து தொடங்கி, கடற்கரை ரெயில் நிலைய வாயில் வரையில் நடைபாதையில் புதிதாகத் தோன்றியிருந்த பர்மா பஜாரைச் சுற்றுவோம். அங்கு தேவையான வெளிநாட்டுப் பொருட்களை வாங்கிக்கொண்டு , அங்கிருந்து மவுண்ட் ரோடு மையத்திற்கு - இப்பொழுது அண்ணா சிலை அமைந்திருக்கும் அந்தப்பகுதிக்கு வருவோம்.

அங்கு 'நியூ எல்பின்ஸ்டன்' தியேட்டரின் பிரதான நுழைவாயிலின் ஓரமாக, உள்ளே இடது புறத்தில் இருந்த 'ஜபார் ஐஸ் கிரீம் பார்ல'ரில் அமர்ந்து 'ஜபார் ஸ்பெஷல் ஐஸ்கிரீம்' சாப்பிடுவோம். இரண்டு இட்லிகள் மற்றும் வடை கொள்ளக்கூடிய அளவிலான நீண்ட பீங்கான் கிண்ணத்தில் 'சாக்லட்', 'பிஸ்தா' மற்றும் 'ஸ்ட்ராபரி' ஆகிய மூன்று வகையான ஐஸ்கிரீம்  இருக்கும். அத்துடன் அரபு நாட்டு இறக்குமதிப் பொருளான காய்ந்த பழத்துண்டுகள் கலந்து, வஞ்சகம் இல்லாமல் கோப்பை நிறைய கொடுப்பார்கள்.
 
அதிலேயே பாதி வயிறு நிறைந்து விடும்!

தேவர் பிலிம்ஸ் படப்பிடிப்பில் ஒருநாள் மாலைச் சிற்றுண்டி இடைவேளையின்போது, பேச்சுவாக்கில் இந்த ஜபார் ஸ்பெஷல் ஐஸ் கிரீமின் பெருமையை எம்.ஜி.ஆரிடம் அளந்தேன். அதற்குக் காரணம் அவர் ஐஸ்கிரீம் பிரியர்!. 'எங்கிருக்கிறது' என்று கேட்டு இடத்தைத் தெரிந்து கொண்டார்.

அடுத்த நாள் மாலை சிற்றுண்டிக்கான இடைவேளை வந்ததும், எம்.ஜி.ஆர். என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு தனது ஒப்பனை அறைக்குள் நுழைந்தார். 

கதவு உள்ளே தாளிடப்பட்டது. காரணம் முதலில் எனக்குப் புரியவில்லை. 

எம்.ஜி.ஆரிடம் நீண்ட காலமாக, வீட்டோடு உதவியாளராக இருந்த சபாபதி, கீழே இருந்த இரண்டு பெரிய 'பிளாஸ்கு'களை எடுத்து டீப்பாய் மீது வைத்து ஒன்றைத் திறந்தார். இரண்டு பீங்கான் பிளேட்டுகளை ஸ்பூன் சகிதம் எங்கள் எதிரில் வைத்தார். திறந்த பிளாஸ்கில் இருந்த பொருளை கரண்டியால் எடுத்து எங்கள் தட்டில் பரிமாறினார்.

அந்தப் பொருள் வேறு எதுவுமில்லை. ஐஸ்கிரீம்தான்! அதுவும் ஏவி.எம். முருகன் பிரதர்ஸ§டன் சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்து எம்.ஜி.ஆரிடம் முந்தின நாள் நான் சிலாகித்துக் கூறிய, அதே 'ஜபார் ஸ்பெஷல் ஐஸ் கிரீம்'தான். நான் திகைத்துப்போனேன்.

எம்.ஜி.ஆர். சொன்னார்:-

எம்.ஜி.ஆர்:- என்னை விட்டுட்டு நீங்க மட்டும் போய் சாப்பிட்டுட்டு வந்து எங்கிட்டேயே அளந்தீங்களே! அதை இப்போ என்னோட சேர்ந்து சாப்பிடுங்க. 
நான்:- அண்ணே! இது எப்படி இங்கே வந்தது?

எம்.ஜி.ஆர்:- மத்தியானமே சபாபதிகிட்டே சொல்லி வச்சிருந்தேன். காரை எடுத்துக்கிட்டுப்போய் வாங்கிக்கிட்டு வந்திட்டான். இதுக்குன்னே அம்மாகிட்டே சொல்லி வீட்டுலேருந்து கொண்டு வந்த பிளாஸ்க் இது.

நான்:- அம்மாவுக்கும் சேர்த்து வாங்கிக்கிட்டு வரச்சொல்லியிருக்கலாமே.

எம்.ஜி.ஆர்:- இதோ - இந்த பிளாஸ்க் அம்மாவுக்குத்தான். ஜானுவுக்கும் ஐஸ்கிரீம் ரொம்பப் பிடிக்கும். நேற்று நீங்க சொன்னது உண்மைதான். இப்படி ஒரு வித்தியாசமான புதுவிதமான ஐஸ்கிரீமை, அதுவும் இந்தக்காய்ந்த பழங்கள் விதைகளோட கலந்து இதுவரைக்கும் நான் சாப்பிட்டதே இல்லை. இனி இதை விடமாட்டேன்.

சாப்பிடுவதில் மட்டும் அல்ல. சாப்பிட வைப்பதிலும் எம்.ஜி.ஆர். இன்பம் காண்பவர். இதை அவருடன் நெருங்கிப் பழகிய அனைவருமே அறிவார்கள்.
--ஆரூர் தாஸ் - Veteran film scriptwriter 

Aroor Das

நன்றி   தினத்தந்தி 

கோடம்பாக்கம்--சாலிகிராமம்

கோடம்பாக்கம் - -சாலிகிராமம் பெயர்க்காரணம்

கோடம்பாக்கம். தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஊர்களின் பெயர்களைப்போலவே இதுவும் ஒரு காரணப்பெயர்!.'கோடம்' என்ற சொல்லுக்கு 'எல்லை' என்று பொருள். 'பாக்கம்' என்றால் சிற்றூர். கோடம் + பாக்கம் = கோடம்பாக்கம். ஆதிகால சென்னப்ப நாயக்கன் பட்டினத்தின் மேற்கு எல்லையைச் சார்ந்த ஓர் ஊர் இது என்பதால், இதற்கு இந்தப்பெயர் வந்தது. இது ஒரு காரணம்.

இன்னொரு விளக்கமும் உள்ளது-

'கோடா' என்ற உருதுச் சொல்லுக்கு 'குதிரை' என்றும், 'பாக்' என்பதற்கு 'இடம்' என்றும் பொருள். கோடா+பாக் = 'கோடாபாக்' என்ற தமிழ் உச்சரிப்புச் சொல் திரிந்து நாளடைவில் 'கோடம்பாக்கம்' என்று ஆகிவிட்டது.

அதிருக்கட்டும். குதிரைக்கும் கோடம்பாக்கத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?.

அது என்னவென்றால், ஆங்கிலேயரின் சென்னை வருகைக்கு முற்காலத்தில், ஆற்காட்டை ஆண்டு வந்த 'நவாப்' என்னும் முஸ்லிம் அரசர்கள், மேற்குத் திசையிலிருந்து கிழக்கே உள்ள சென்னப்ப நாயக்கன் பட்டினத்திற்கு தம் பரிவாரங்களுடன் வருவார்கள். அப்போழுதெல்லாம் நீண்ட தூரம் பயணித்து வந்த குதிரைகளிலிருந்து இறங்கி, இந்த இடத்தில் இளைப்பாறி ஓய்வெடுத்துக் கொள்வார்கள். அவர்களைச் சுமந்து ஓடிவந்த குதிரைகளுக்கும் போதிய ஓய்வு கொடுப்பார்கள். அவ்வாறு தமது குதிரைகளை நிறுத்தி வைத்து ஓய்வும், உணவும் கொடுத்த அந்தக் குறிப்பிட்ட இடம் - சிற்றூர்தான், நாளடைவில் 'கோடா பாக்' என்றும், பிறகு 'கோடம்பாக்கம்' என்றும் வழங்கலாயிற்று என்று அதன் வரலாறு கூறுகின்றது.



கோடம்பாக்கத்தைச் சார்ந்து 'ஏவி.எம்', 'பிரசாத்' போன்ற ஸ்டூடியோக்களும், கலைஞர்களும் இருக்கின்ற 'சாலிகிராமம்' என்பதும் காரணப்பெயர்தான். எப்படி என்றால் 'சாலிகன்', 'சாலியன்' என்ற சொல்லுக்கு 'கைத்தறி நெசவாளன்' என்று பொருள். ஒருகாலத்தில் இந்தப் பகுதியில் 'சாலியர்' குடும்பங்கள் நிறைந்திருந்து, நெசவுத் தொழில் நடைபெற்று வந்தது. இதனால் 'சாலிகிராமம்' என்னும் பெயர் உண்டானது. இங்கு நேர்த்தி மிக்க புடவைகள் நெய்யப்பட்டன.

60 ஆண்டுகளுக்கு முன்பு, நான் சென்னை வந்த அந்த நாட்களில் 'கோடம்பாக்கம் புடவை' புகழ் பெற்றிருந்தது. என் தாயார் அதை விரும்பி உடுத்தியதால், நான் ஊருக்குச் செல்லும்போதெல்லாம் நிறைய புடவை வாங்கி இருக்கிறேன். இன்றைக்கு கோடம்பாக்கமும், அதைச்சார்ந்த சாலிகிராமமும் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட அந்த அழகிய வண்ணவண்ண புடவைகள் மட்டும் இல்லை.

Wednesday, December 3, 2014

சாப்ளினுக்கு அமெரிக்கா தடை

சாப்ளினுக்கு அமெரிக்கா தடை

மனிதர்கள் எதிர்கொள்ளும் சோதனைகளையும், நெகிழ்வான தருணங்களையும் திரைப்படங்கள் மூலம் நகைச்சுவையாகச் சொன்னவர் சார்லி சாப்ளின்.
பிரிட்டனைச் சேர்ந்த அவர், தனது கலைவாழ்க்கையின் ஆரம்பகட்டத்தில் அவ்வப்போது அமெரிக்காவுக்குச் சென்றுவருவார். 1913-ல் அவர் நடித்த ‘மேக்கிங் எ லிவிங்’ என்ற படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகில் புயலாக நுழைந்தார். ‘தி கோல்டு ரஷ்’, ‘மாடர்ன் டைம்ஸ்’, ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்று பல படங்களை உருவாக்கி, ஹாலிவுட்டின் சிறந்த கலைஞரானார்.
அவரது படங்கள் ஏழைகளின் பரிதாப வாழ்வைச் சித்தரித்ததுடன், முதலாளி வர்க்கத்தின் பேராசையையும் விமர்சித்தன. எனவே, ஒரு கம்யூனிஸ்ட் என்று கருதி அமெரிக்க அரசு அவரை வெறுத்தது. 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் இருந்தும், அவர் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற முயலவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், 1952 செப்டம்பர் 18-ல், தனது ‘லைம்லைட்’ படத்தைப் பிரபலப்படுத்தும் முயற்சியாக 21 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அதற்கு அடுத்த நாள், அவர் மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்தது அமெரிக்க அரசு. கப்பலில் இருந்த அவருக்கு இந்தத் தகவல் கிடைத்தது. “நான் அரசியல்வாதி அல்ல; தனிமனிதன். அதேசமயம், நான் அதீத தேசபக்தன் அல்ல. அதீத தேசபக்தி ஹிட்லரிசத்தைத்தான் உருவாக்கும்” என்றார் சாப்ளின்.
அதன் பிறகு, பல ஆண்டுகள் அவர் பிரிட்டனிலேயே தங்கி, திரைப்படங்களை உருவாக்கினார். 1972-ல் அவரை அழைத்து, ஆஸ்கர் விருது வழங்கி, வரலாற்றுத் தவறைச் சரிசெய்துகொண்டது அமெரிக்கா.

மரணத்தின் கோரத் தாண்டவம் நிகழ்ந்தபோது...

என்ன காரணம்?
1984, டிசம்பர்-2 அதிகாலை அந்தக் கொடிய விபத்து நடந்த தருணத்தில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்த மொத்த மீத்தைல் ஐசோசயனைடின் அளவு 63 டன். 610, 611, 619 ஆகிய எண்கள் இடப்பட்ட கலன்களில் மொத்த மீத்தைல் ஐசோசயனைடும் வைக்கப்பட்டிருந்தன. விதிமுறைப்படி, இந்தக் கொள்கலன்களெல்லாம் பாதிக்கு மேல் நிரப்பப்படக் கூடாது. ஏதாவது வேதிவினை நிகழ்ந்தால் அதைத் தடுப்பதற்கான வேதிப்பொருளைச் செலுத்துவதற்காகத்தான் அப்படி ஒரு விதிமுறை. ஆனால், 610 என்ற கலனில் 42 டன் மீத்தைல் ஐசோசயனைடு வைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட அந்தக் கலனின் முழுக் கொள்ளளவு இது. அப்பட்டமாக எல்லாம் மீறப்பட்டன என்பதற்கு ஓர் உதாரணம் இது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிக்கன நடவடிக்கை என்று சொல்லி முன்னரே கைவிட்டிருந்தார்கள்.
ஊழியர்களின் அறியாமை, நிர்வாகத்தின் பொறுப்பற்றதனம், அரசின் அலட்சியம் எல்லாம் சேர்ந்து இந்தப் பேரழிவை நிகழ்த்தியது.
மரணத்தின் திசை
போபாலின் ஹமீதியா மருத்துவமனையில் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை நிகழ்த்தியபோது தெரிந்த அறிகுறிகள் சுட்டிக்காட்டிய திசை ஒன்றுதான்: ஹைட்ரோசயனைடு அமிலம். அந்த அமிலத்துக்கு ஒரு எதிர்மருந்து இருக்கிறது: சோடியம் தையோசல்ஃபேட். இந்தக் கண்டுபிடிப்பை பெரிய டாக்டரிடம் தெரிவித்தபோது அவர் நம்பவில்லை. ஹைட்ரோசயனைடுக்கு இங்கே என்ன வேலை என்பதுதான் அதற்குக் காரணம். உயர் வெப்பநிலையில் மீத்தைல் ஐசோசயனைடிலிருந்து ஹைட்ரோசயனைடு அமிலம் உருவாகக் கூடும் என்பது அந்த பெரிய டாக்டருக்குத் தெரியவில்லை. அவருக்குத் தெரிந்திருந்தால் ஏராளமானோரை உடனடியாகக் காப்பாற்றியிருந்திருக்கலாம்.


இறப்பிலும் ஆதாயம் தேடி…
முன்வாசலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தை அனுப்பி போபால்வாசிகளைக் கொன்ற அமெரிக்கா, பின்வாசல் வழியாக வேறு சிலரையும் அனுப்பியது: அமெரிக்க வழக்கறிஞர்கள்! பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்கள் இப்படியெல்லாம் பேசினார்கள்: “யூனியன் கார்பைடு நிறுவனத்தைச் சும்மா விடக் கூடாது. நாங்கள் உங்களுக்காகவே வந்திருக்கிறோம். அமெரிக்காவில் அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்து, உங்களுக்கு உரிய நிவாரணம் வாங்கித்தருகிறோம். சாதாரணத் தொகையல்ல: ஆளுக்கு ரூ. 10 லட்சம். மொத்தத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே எங்கள் கட்டணம்.”
உண்மையான வில்லன்
உண்மையான வில்லன் மீத்தைல் ஐசோசயனைடு அல்ல, ஹைட்ரோசயனைடு அமிலம்தான். போபால் பேரழிவில் பெரும்பாலான மரணங்களுக்கும் பாதிப்புகளுக்கும் காரணம் அதுதான். உயர் வெப்பநிலையில் மீத்தைல் ஐசோசயனைடு பல்வேறு வாயுக்களாகப் பிரிகிறது. அதில் ஒன்றுதான் ஹைட்ரோசயனைடு அமிலம்.
கடவுளைச் சந்திக்கும்போது…
பேரழிவுக்கு மத்தியில்தான் மனிதர்களின் உன்னத குணங்களும் அற்ப குணங்களும் வெளிப்படும் என்பது உண்மை. ஒரு முஸ்லிம் பெண்ணின் பிரேதத்தை மீட்புப் பணியினர் எடுத்துச் செல்ல முயன்றபோது இந்துப் பெண் ஒருவர் அவர்களைத் தடுத்து நிறுத்தினார். தன் கையிலுள்ள வளையல்கள் உள்ளிட்ட அணிகலன்களை அந்த முஸ்லிம் பெண்ணுக்குச் சூட்டிவிட்டுச் சொல்லியிருக்கிறார்: “இந்தப் பெண் என்னுடைய தோழி. கடவுளைச் சந்திக்கும்போது அவள் அழகாக இருக்க வேண்டும்.”
நடைப்பிணமான நாயகன்
நூற்றுக் கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டர் வி.கே. சர்மாவின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. மருத்துவமனையில் பிணங்களைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த புகைப்படக்காரர் ஒரு உடலிலிருந்து சிறு அசைவு தென்பட்டதைப் பார்த்து உடனடியாக டாக்டரிடம் தெரிவிக்க, இறந்துகொண்டிருந்த அந்த உயிரை டாக்டர் காப்பாற்றினார். அது வேறு யாருமல்ல. வி.கே. சர்மாதான். உயிர்பிழைத்தாலும் வி.கே. சர்மா நடைப்பிணம் போன்றுதான் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கிறார். தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நூற்றுக் கணக்கானோரைக் காப்பாற்றிய அவருக்கு இந்திய அரசு கொடுத்த நிவாரணத் தொகை எவ்வளவு தெரியுமா? 35,000 ரூபாய்தான்.
உயிரைக் காப்பாற்றிய ஈரத் துண்டு
ஈரத் துண்டு எத்தனை பேர் உயிரை அப்போது காப்பாற்றியது தெரியுமா? பிறருடைய உயிரைக் காப்பாற்றச் சென்றவர்கள்கூட ஈரத் துண்டை முகத்தில் பொத்திக்கொண்டுதான் சென்றார்கள். வலுகுறைப்பானாகத் திறம்படச் செயல்பட்டது ஈரத் துண்டு. பிழைத்தவர்களில் பலரும் கும்பிடும் தெய்வங்களுள் ஈரத் துண்டும் ஒன்று.
அதீத மூச்சு ஆபத்தே
விஷவாயு கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தபோது அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தப்பிச்செல்ல முயன்றவர்கள்தான். வேகமாக ஓடியபோது அதிகக் காற்றை உள்ளிழுக்க நேர்ந்ததால் விரைவாக அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அவர்களோடு ஒப்பிட்டால், வீடுகளில் ஒடுங்கி இருந்தவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு சற்றுக் குறைவே.
நாயகன்
போபால் ஸ்டேஷன் மாஸ்டர் வி.கே. சர்மாதான் உண்மையான ‘நாயகன்’. விஷவாயுவின் அசுரத் தாக்குதலுக்கு மத்தியில் அந்த ஸ்டேஷனை நெருங்கிக்கொண்டிருந்த கோரக்பூர் ரயிலின் பயணிகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமே! லாந்தர்களுடன் அவர் அனுப்பிய ஆட்களாலும் ரயிலைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. பிளாட்ஃபாரத்தை நோக்கி ரயில் வந்துகொண்டிருப்பதைப் பார்த்த சர்மாவுக்குப் பகீரென்றிருந்தது. உடனடியாக ஒலிபெருக்கியில் உருது, இந்தியில் எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்தார். மேலிட ஆணை இல்லாமல் ரயிலை உடனடியாகக் கிளம்பாமல் ஓட்டுநர் காத்திருந்தார். முகத்தில் பொத்திய ஈரத் துணியுடன் பிணக் குவியல்களைத் தாண்டி வேகமாக ஓடிய சர்மா, ஓட்டுநரிடம் அவசரஅவசரமாகத் தகவல்களைத் தெரிவிக்கவும், ரயில் உடனடியாகப் புறப்பட்டது.
எல்லாம் இழந்த பின்னும்…
சஜீதா பானுவின் நிலைதான் இன்னும் மோசம். போபால் பேரழிவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், யூனியன் கார்பைடு கம்பெனியில் ஏற்பட்ட வாயுக் கசிவில் அவள் தன்னுடைய கணவர் முகம்மது அஷ்ரஃபை இழந்திருந்தார். அதாவது, அந்த விஷவாயுவின் முதல் பலியே அஷ்ரஃப்தான். போபால் பேரழிவின்போது தன்னுடைய குழந்தை ஒன்றையும் சஜீதா இழந்தார். இருந்தும், இன்று வரை அவருக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.
மரணத்தின் பால்
அந்தப் பேரழிவின்போது பலரையும் காப்பாற்றிய டாக்டர் சர்க்காரால் அதற்குப் பிறகு ஒருபோதும் அந்தக் காட்சியை மறந்திருக்க முடியாது. போபால் ரயில்வே பிளாட்ஃபாரத்தில் பிணக் குவியல்களுக்கு மத்தியில் ஏதோ அசைவைக் கண்டிருக்கிறார். அருகே வந்து பார்த்தார்: இறந்துகிடந்த தன் தாயின் உயிரற்ற மார்பை ஒரு குழந்தை சப்பிக்கொண்டிருந்தது!

போபால் - விலகாத அழிவின் நிழல்

டிசம்பர் 2, 1984. நள்ளிரவு. கடுங்குளிர். நாய்கள் ஓலமிடுகின்றன. ஊர் பாதித் தூக்கத்தில் எழுகிறது. மூச்சுத் திணறுகிறது. காற்றுக்காகக் கதவைத் திறந்து வெளியே வருபவர்கள் காற்றில் எரிச்சலை உணர்கிறார்கள். இன்னதென்று யோசிக்கும் முன் ‘யூனியன் கார்பைடு’ தொழிற்சாலையிலிருந்து அபாயச் சங்கு ஒலிக்கிறது. ஓடுகிறார்கள். சரிகிறார்கள். சாகிறார்கள். விடிந்தபோது வீதியெங்கும் மனிதப் பிணங்களின் எண்ணிக்கைக்கு இணையாக கால்நடைகள், பறவைகளின் உடல்கள். அன்று தொடங்கி போபால் மக்கள் போராடுகிறார்கள். கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் செத்திருக்கிறார்கள். 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பிறக்கும் ஒவ்வொரு 25-வது குழந்தையும் குறைபாடுடைய குழந்தையாகப் பிறக்கிறது. ஆலையைச் சுற்றியுள்ள 3 கி.மீ. பரப்பளவுக்கு நிலத்தடி நீர் நஞ்சாகியிருக்கிறது. இன்னமும் ‘யூனியன் கார்பைடு’ விட்டுச்சென்ற 350 டன் நச்சுக் கழிவு அகற்றப்படவில்லை.
*இந்தியாவில் தொழில் தொடங்க உரிமம் கோரி, யூனியன் கார்பைடு நிறுவனம் 1.1.1970-ல் விண்ணப்பித்தது. நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த விண்ணப்பத்தின் மீது 31.10.1975-ல் திடீரென முடிவெடுக்கப்பட்டு ஒப்புதல் தரப்பட்டது. நெருக்கடி நிலை அறிவிப்பு அமலில் இருந்த காலம் அது.
*போபால் ‘யூனியன் கார்பைடு’ ஆலை மிக அபாயகரமான ரசாயனங்களைக் கையாள்வது அன்றைக்குப் பெரும்பான்மை மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கொள்கலன் வெடித்து விஷ வாயு கசிந்தால், எப்படி எதிர்கொள்வது என்பது அங்குள்ள மருத்துவர்களுக்குக்கூடச் சொல்லப்பட்டிருக்கவில்லை.
*சம்பவம் முடிந்து நான்காவது நாள் ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் போபால் வந்தார். மத்தியப் பிரதேச அரசு அவரையும் அவருடைய இந்திய சகாக்களையும் கைதுசெய்தது. அவருடைய ஆலையின் விருந்தினர் மாளிகையிலேயே அவர் தங்கவைக்கப்பட்டார். அடுத்த சில மணிநேரங்களில் ஆண்டர்சனை விடுவித்தார் முதல்வர் அர்ஜுன் சிங். அரசு விமானத்திலேயே டெல்லிக்கு அனுப்பி, அங்கிருந்து அமெரிக்கா செல்ல வழிவகுத்தார். அன்றைய தினம் மத்தியப் பிரதேசத்தில்தான் சாகர் என்ற ஊரில் இருந்தார் வெளியுறவுத் துறையைத் தன்வசம் வைத்திருந்த பிரதமர் ராஜீவ் காந்தி. ஆனால், ஆண்டர்சன் விவகாரம் அவருக்குத் தெரியாது எனச் சாதித்தனர் காங்கிரஸ் தலைவர்கள். இது தொடர்பான பதிவுகளே வெளியுறவுத் துறையிடம் இல்லை என்று பின்னாளில் அறிவித்தது அரசு.
*அமெரிக்க நீதிமன்றங்களை நாட ஆரம்பித்தார்கள் போபால் மக்கள். அமெரிக்காவில் இந்த வழக்கை நடத்தினால், பெரும் தொகையை இழப்பீடாகத் தர வேண்டியிருக்கும்; இந்தியாவிலேயே வைத்து முடித்துவிடலாம் என்று ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்துக்கு ஆலோசனை சொன்னவர்கள் இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள். பல ஊடகங்களும் விலைபோயின. ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடந்த இந்தச் சம்பவத்தை, தொழிலாளர்களின் சதியால் நடந்தது என்றெல்லாம்கூட எழுதின.
*இந்தியாவில் வழக்கு விசாரணை நடக்க ஆரம்பித்த பின், முதலில் இழப்பீடாக 300 கோடி டாலர்களைக் கேட்ட இந்திய அரசு, ஒருகட்டத்தில் அமெரிக்க நெருக்கடிக்கு உடன்பட்டு, 47 கோடி டாலர்களுக்குச் சம்மதித்தது. இதையும் பெற மக்கள் 20 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதிக்க வேண்டியிருந்தது. இடைப்பட்ட காலத்திலேயே ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்தைக் கையகப்படுத்தியது ‘டௌ’ நிறுவனம். உலகின் மோசமான தொழிற்சாலைப் பேரழிவான இந்த வழக்கில் 26 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பளித்தது நம்முடைய நீதிமன்றம். குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை: 2 ஆண்டு சிறை, ரூ. 1.01 லட்சம் அபராதம். இத்தனை அனுபவங்களுக்குப் பின்னரும், சர்வதேச நிர்ப்பந்தங்களால் மக்கள் பாதிப்படையும் வகையில் அணுசக்தி இழப்பீட்டு மசோதாவை நிறைவேற்றியது மன்மோகன் சிங் அரசு.
*‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்தின் சார்பிலும் ‘டௌ’ நிறுவனம் சார்பிலும் செயல்பட இங்கு பலருக்கும் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் ‘யூனியன் கார்பைடு’ சார்பில் ஆஜரானவர் நானி பால்கிவாலா. ‘டைம்’ இதழுக்கு 1984-ல் அளித்த பேட்டியின்போது, “இந்தியாவில், ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால், அடுத்த நூற்றாண்டில்தான் தீர்ப்பு வரும்” என்று சொன்னார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான அபிஷேக் மனு சிங்வி, பாஜகவின் இன்றைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இருவருமே ‘டௌ’ நிறுவனத்துக்குச் சட்ட ஆலோசனை வழங்கியவர்கள். 2008-ல் பாஜக ‘டௌ’ நிறுவனத்திடமிருந்து நன்கொடையைப் பெற்றது.
*போபால் மக்கள் நீண்ட காலமாகப் போராடினார்கள், வாரன் ஆண்டர்சனைக் கைதுசெய்து இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று. பிழைப்புக்காக ஸ்வீடனிலிருந்து அமெரிக் காவுக்கு வந்த ஒரு தச்சுத் தொழிலாளியின் மகன். ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்தில் ஒரு விற்பனையாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். நாசகார ரசாயனத் தொழிற்சாலைகளால் விளையும் ஆபத்தை எப்படி எதிர்கொள்வது என்று ஏகாதிபத்திய நாடுகள் யோசித்த நாட்களில், அமெரிக்கா, ஐரோப்பாவைத் தாண்டி ‘யூனியன் கார்பைடு’ நிறுவனச் செயல்பாடுகளை மூன்றாம் உலக நாடுகளான லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஆசிய நாடுகளுக்குக் கொண்டுசென்றவர். ஏகாதிபத்திய சேவையாலேயே பின்னாளில் அந்நிறுவனத்தின் தலைவராக உயர்ந்தவர். கடந்த செப்.29 அன்று இறந்தார்.
*பேரழிவின் பாதிப்பிலிருந்து இன்னும் வெளியேற முடியாமல் தவிக்கும் போபால் மக்கள் நவீன சிகிச்சைக்கும் தொடர் சிகிச்சைக்கும்கூட போதிய உதவியில்லாமல் பரிதவிக்கிறார்கள். அந்தக் கழிவுகளை எப்படி அகற்றுவது என்று நம் அரசுக்கு இன்னும் தெரியவில்லை. இதற்கென ரூ. 25 கோடி நிதி ஒதுக்கி ஜெர்மனியைச் சேர்ந்த ‘ஜி.ஐ.எஸ்.’ நிறுவனத்திடம் கழிவகற்றும் பணியை ஒப்படைத்தது. ஆனால், கழிவுகளை அகற்றுவதில் உள்ள சவால்கள், விபத்து அபாயம், அதற்குப் பொறுப்பேற்கும் சுமை உள்ளிட்ட விஷயங்களை யோசித்த அந்த நிறுவனமும் பின்வாங்கிவிட்டது. கழிவு நிலத்தையும் நீரையும் நஞ்சாக்கி மனிதர்களை முடக்கிக்கொண்டிருக்கிறது. துரோங்கள் தொடர்கின்றன. நாம் வேடிக்கை பார்க்கிறோம்.

Monday, July 7, 2014

சாத்தூருக்குப் பெருமை சேர்க்கும் சேவு


பாரதியார் வீரப் பலகாரங்கள் என ஒரு பட்டியல் போடுகிறார். அதாவது சாப்பிடுவதற்குக் ‘கரமுறகரமுற’ என இருக்கும் முறுக்கு, வறுவல்(சீவல்), சேவு போன்ற இந்தப் பலகாரங்களைச் சாப்பிட்டால் ஓர் உற்சாகம் பிறக்கும். இம்மாதிரியான பலகாரங்களுக்கு அவர் வேடிக்கையாக ‘வீரப் பலகாரம்’ எனச் சிறப்பு அடைமொழி கொடுக்கிறார்.
இந்த வீரப் பலகாரத்தில் குறிப்பிடத்தகுந்தது ‘சேவு’. இதை வட தமிழகத்தில் ‘காரசேவு’ என அழைக்கிறார்கள். பொதுவாகத் தென்மாவட்டத்தில் பெரும்பாலான ஊர்கள் முறுக்கு, சேவு, வறுவல் தயாரிப்பில் பெயர் பெற்றவை. கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், விருதுநகர் ஆகிய ஊர்களில் இந்தப் பலகாரங்களைத் தயாரிக்கும் பட்டறைகள் அதிக அளவில் இருக்கின்றன. ஆனாலும் சேவுக்கெனப் புகழ் பெற்ற ஊர் சாத்தூர்தான்.
சென்னை - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் உள்ள இந்த ஊரைத் தாண்டிச் செல்லும் யாரையும் தன்பால் ஈர்த்துவிடும் குணம் கொண்டது சாத்தூர் சேவு. சாத்தூர் பேருந்து நிலையத்திலேயே ‘சாத்தூர் சேவு’ ‘சாத்தூர் சேவு’ என ஒலிக்கும் வியாபாரிகள் சத்தம் சாத்தூர் சேவின் ருசிக்குச் சான்றாகும். சாத்தூர் இந்தப் பெருமையைத் தக்கவைத்துக்கொண்டிருக்கக் காரணம் சண்முக நாடார் மிட்டாய்க் கடைதான். சாத்தூர் நகராட்சி பஸ் ஸ்டாண்டுக்கு அருகே ரயில்வே சாலையில் உள்ளது நூறு வருடம் பழமையான இந்தக் கடை.
இந்தக் கார சேவு, வட இந்தியத் தின்பண்டமான ‘புஜியா’விலிருந்து வந்திருக் கலாம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் புஜியா இன்னும் சிறியதாக இருக்கும். சண்முகவேல்
நாடார் நூறாண்டுகளுக்கு முன்பே இத்தொழிலைச் சாத்தூரில் தொடங்கினார். ஆனால், அப்போது சேவு அல்லாத பலவிதமான தின்பண்டங்களைத் தயாரித்து விற்றுவந்தார். பிறகு சேவு
அந்தப் பகுதியில் பிரபலமாக, அதையும் தயாரித்து விற்றார். சண்முகவேல் நாடாரின் தயாரிப்பு சேவுக்குக் கூடுதல் சுவையைக் கொடுக்க, அது சாத்துருக்கே பெருமை அளிக்கும் விஷயமானது.
சண்முகவேல் நாடாரின் கடைக்கு 1964-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜர் வந்திருக்கிறார். இன்னும் பல முக்கியஸ்தர்களைச் சண்முக நாடாரது சேவின் சுவை இழுத்து வந்திருக்கிறது. சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் சாத்தூர் சேவை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். நாளொன்றுக்கு 150 கிலோ வரை சண்முக நாடார் கடையில் சேவு விற்பனையாகிறது. இப்போது இந்தக் கடையைச் சண்முக நாடாரின் மூன்றாம் தலைமுறையினர் நிர்வகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
கொடைக்கானலில் இருந்து தருவிக்கப்படும் பூண்டும், தனித்துவமான கைப்பக்குவமும், சுத்தமான பகுதிப் பொட்களும்தான் சண்முக நாடார் கடைச் சேவின் தனி ருசிக்குக் காரணம். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்ப் பொடி, கடலை எண்ணெய், சீரகம், பூண்டு, வெங்காயம், கல் உப்பு ஆகியவைதான் சேவு தயாரிப்பின் பகுதிப் பொருள்களாகும்.
சுத்தமான தண்ணீரில் எடுத்துவைத்துள்ள மிளகாய்ப் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கரைசலாக்கிக் கொள்ள வேண்டும். பூண்டு, பெருங்காயம் இரண்டையும் அரைத்து விழுதாக்கித்
தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர்க் கரைசலுடன் கடலைமாவு, அரிசி மாவு இரண்டையும் கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைய வேண்டும். அரைத்து விழுதாக்கப்பட்ட பூண்டு, பெருங்காயக் கலவையை அதனுடன் சேர்த்துப் பிசைய வேண்டும். பிறகு சீரகத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையைச் சேவு பிழியும் சாதனத்தில் இட்டு அடுப்பில் கொதிக்கவைக்கப்பட்ட கடலை எண்ணெயில் மாவைக் குச்சி குச்சியாகப் பிழிய வேண்டும். பிறகு அதைப் பக்குவமாக வேகவிட்டு எடுத்தால் மொறு மொறுயான சேவு தயார்!

Thursday, July 3, 2014

இந்துக்களின் சம்பிரதாயம்

இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் விஞ்ஞான காரணங்கள்!
இந்து மதம் என்பது ஒரு புதிரான மதமாகும். எண்ணிலடங்கா சடங்குகள், மரபுகள் மற்றும் சம்பிரதாயங்கள் இந்த நம்பிக்கையின் பின்புலமாக அமைகிறது. இவ்வகையான சடங்குகளின் அவசியம் என்ன என நம்மில் பலருக்கும் கேள்வு கேட்க தோன்றும். இன்றைய நவீன உலகத்தில் அது எப்படி பொருத்தமாக அமையும் என்றும் தோன்றும். நம்மில் பலரும் பல சடங்குகளை மூட நம்பிக்கை என கூறி ஒதுக்கி வைத்து விடுகிறோம். ஆனால் அவைகள் எல்லாம் பழங்காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருபவைகளாகும். ஆனால், அனைத்து இந்து சடங்குகளும் மூட நம்பிக்கைகளா? இதற்கான விடை உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும்.

பொதுவாகவே மூட நம்பிக்கைகளையும் குருட்டு நம்பிக்கைகளையும் வளர்த்து வருவதாக குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களுக்கும் ஆளாகியிருக்கிறது இந்து மதம். ஆனால் உண்மை மிகவும் அப்பாற்ப்பட்டது இது. இந்து மதம் என்பது உலகத்தில் உள்ள விஞ்ஞான வடிவிலான மதங்களில் ஒன்றாகும். அதன் வழக்கங்களும் மரபுகளும் காரண காரியத் தொடர்புடைய விஞ்ஞான காரணங்களை அதன் பின் வைத்திருக்கும். ஒவ்வொரு சடங்குகளும் நாம் நலமுடன இருப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அது தனிப்பட்டவரின் செய மேம்பாட்டுக்கும் உதவும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

நமஸ்காரம்
நமஸ்காரம் செய்வது இந்தியர்களின் உன்னதமான சைகையாகும். பொதுவாக இதை மரியாதை அளிக்கும் சைகையாக பார்க்கிறனர். ஆனால், நமஸ்காரம் செய்யும் போது, இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது, உங்களின் விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும். அவைகள் ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்பட தொடங்கும். இதனால் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்க செய்யும்.

கோவில் மணிகள்
கோவில் மணிகள் சாதாரண உலோகத்தில் செய்யப்படுவதில்லை. காட்மியம், ஜின்க், லெட், காப்பர், நிக்கல், க்ரோமியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல உலோகங்களை கொண்டு செய்யப்படுபவை தான் மணிகள். கோவில் மணியை செய்ய ஒவ்வொரு உலோகத்தையும் சரியான அளவில் கலக்க வேண்டும். அதன் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானம் என்னவென்று தெரியுமா? மணியை ஒலிக்க செய்யும் போது ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு தனித்துவமான ஒலியாய் எழுப்பும். இது உங்கள் இடது மற்றும் வலது மூளையை இணைக்க செய்யும். அதனால் மணி அடித்த அடுத்த தருணமே, நீண்ட நேரம் ஒலிக்கும் கூர்மையான சத்தம் எழும். இது 7 நொடிகள் வரை நீடிக்கும். மணியில் இருந்து எழும் எதிரொலி உங்கள் உடலில் உள்ள 7 குணமாதல் மையங்களையும் (சக்கரங்கள்) தொடும். அதனால் மணி ஒலித்த உடனேயே, உங்கள் மூளை சில வினாடிகளுக்கு வெறுமையாகி விடும். அப்போது மெய்மறதி நிலையை அடைவீர்கள். இந்த மெய்மறதி நிலையில், உங்கள் மூளை சொல்வதை வரவேற்கும் பண்பை பெறும்.

துளசியை வழிபடுதல்
இந்தியாவில் உள்ள முக்கால்வாசி இந்துக்களின் வீடுகளில் துளசி செடியுடன் கூடிய துளசி மாடம் இருக்கும். அதனை தினசரி வழிபடுவார்கள். அதற்கு காரணம் துளசியில் உள்ள உயர்ந்த மருத்துவ குணங்கள். துளசி செடியின் மகத்துவத்தை புரிந்து கொண்ட பழங்கால முனிவர்கள், அது அழிந்து விடாமல் காப்பதற்காக, அதனை வழிபடும் சடங்கை உண்டாக்கினார்கள். அப்படி செய்வதால் அச்செடியை மதித்து அதனை பத்திரமாக பாதுகாத்திடுவர்.

அரசமரம்
பொதுவாக அரசமரத்தை பயனற்ற மரமாக பார்க்கின்றனர். அதனால் எந்த ஒரு கனியோ அல்லது திடமான மரமோ கிடைப்பதில்லை. இருந்தும் கூட அதனை பல இந்துக்கள் வழிபடுகின்றனர். ஆனால், இரவு நேரத்தில் ஆக்சிஜென் உண்டாக்கும் சில மரங்களில் அரசமரமும் ஒன்று. என்ன சுவாரசியமாக உள்ளதா? அதனால், இந்த மரத்தை பாதுகாப்பாக வைத்திடவே அதை புனித மரமாக கருதுகின்றனர்.

காலையில் சூரியனை வழிபடுதல்
காலையில் சூரியனை வழிபடுதல் விடியற்காலையில் சூரிய பகவானை வணங்கும் வழக்கம் இந்துக்களிடம் உள்ளது. அதற்கு காரணம் விடியற்காலையில் வரும் சூரிய ஒளிகள் கண்களுக்கு மிகவும் நல்லதாகும். மேலும் காலையில் வேகமாக எழுந்திருப்பது உடலுக்கு ஆரோக்கியமானது.

உணவருந்திய பின் இனிப்பு உண்ணுவது
இந்தியாவில் காரசாரமான பதார்த்தங்களோடு ஆரம்பிக்கும் உணவு, இனிப்பு பண்டங்களுடன் முடிவடையும். அதற்கு காரணம் செரிமான அமைப்பு மற்றும் அமிலங்களை செயல்படுத்த செய்வது காரசாரமான உணவுகள். இந்த செயற்பாட்டை குறைத்திடும் இனிப்புகள். அதனால் உணவருந்திய பிறகு இனிப்புகள் உண்ண பரிந்துரைக்கப்படுகிறது.
தரையில் அமர்ந்து உண்ணுவது
நாம் தரையில் அமரும் போது சுகாசன் தோரணையில் அமர்கிறோம். இந்த தோரணை செரிமானத்தை மேம்படுத்தும். அதனால் நாம் சுகாசன் தோரணையில் அமரும் போது நம் உணவு சுலபமாக செரிமானமடையும்.

Wednesday, July 2, 2014

ரசிகர்கள்தான் என்னை நகைச்சுவை நடிகன் ஆக்கினார்கள்!'



நடிகர் நாகேஷ் 

தமிழ்ப்பட உலகில் தான் பெரிய நகைச்சுவை நடிகராவோம் என்று நாகேஷ் கனவில் கூட நினைத்தது இல்லை. பத்து வருடங்களுக்கு முன்னால், மாம்பலம் கிளப் ஹவுஸ் விடுதியில், படுக்க இடமின்றி 'மொபைல் நாகேஷா'கத் திண்டாடியபோது, இதே பட்டணத்தில் தனக்கு ஒருநாள் பங்களா வாசமும் கார் சவாரியும் கிடைக்கும் என்று அவர் கற்பனைகூடச் செய்து பார்த்தது கிடையாது. 

''காரியாலய நாடகங்களிலும் அமெச்சூர் நாடகங்களிலும் நான் நடித்தபோது எல்லோரும் சிரித்தார்கள்; கைதட்டினார்கள். 'நாகேஷ் வந்தால் சிரிக்க வைப்பான்' என்று அவர்களே முடிவுகட்டிவிட்டார்கள். ரசிகர்கள்தான் என்னை நகைச்சுவை நடிகனாக்கினார்கள். ஆகவே, முழுப் பொறுப்பும் அவர்களுடையது தான்'' என்கிறார் நாகேஷ். 

1933-ம் வருஷம் செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர் நாகேஷ். நிஜப்பெயர் குண்டுராவ். 1951-ம் வருஷம் மார்ச் மாதம் 17-ம் தேதியைத் தன்னால் மறக்கவேமுடியாது என்கிறார். அன்றுதான் அவருக்கு வைசூரி போட்டது. அதன் பலனாக அவர் முகத்தில் ஏற்பட்ட மாற்றம், அவர் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் குலுங்கிக் குலுங்கிக் அழுதார். தன் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று நினைத்தார். கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தவர், படிப்பை நிறுத்திவிட்டு ஹைதராபாத் சென்று ரேடியோ கம்பெனி ஒன்றில் சிறிது காலம் பணியாற்றினார். பிறகு சென்னையில் குடியேறி, ரயில்வே ஆபீசில் என்.ஜி.ஓ-வாக வேலைக்கு அமர்ந்தார். 

''உண்மையைச் சொல்கிறேன்... எனக்குக் கொடுத்த சம்பளம் தண்டம். நான் ஒழுங்காகவே வேலை செய்யமாட்டேன். நாடக வசனம்தான் உருப்போட்டுக்கிட்டிருப்பேன். நாலு மணி அடிச்சா ஏதாவது சாக்கு சொல்லிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிடுவேன். ஒரு நாள், மேல் அதிகாரி எனக்கு அனுமதி கொடுக்கமாட்டேன்னுட்டார். 'அப்படின்னா நான் போன வாரம் கடனா கொடுத்த எட்டணாவைத் திருப்பிக் கொடுங்க, சார்!' என்று கேட்டு எல்லார் எதிர்லேயும் அவர் மானத்தை வாங்கிவிட்டேன். பாவம், அவர்கிட்டே எட்டணா கூட இல்லே. மரியாதையா என்னை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டார். 

எப்படி எனக்கு நடிப்பில் ஆசை வந்ததுன்னு கேட்கறீங்களா... சொல்றேன். ஒரு நாள் மாம்பலம் தேவி பாடசாலையில் ஒரு நாடக ஒத்திகை நடந்துகொண்டிருந்தது. அதுலே ஒரு காரெக்டர் சரியா டயலாக் பேசவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான் டைரக்டரைப் பார்த்து 'இப்படிப் பேசினால் நன்றாக இருக்குமே' என்று சொல்லிப் பேசிக் காட்டினேன். ஆனால், அவர் என்னை அலட்சியப்படுத்திவிட்டார். அன்று முதல் எனக்கு நாடகத்திலே நடிக்கணும்னு ஒரு வெறி ஏற்பட்டது. ஆபீஸ்லே 'எங்கே இன்பம்?' என்று ஒரு நாடகம் போட்டாங்க. அதுலே ஒரு சீன்லே நடிச்சு நல்ல பெயர் வாங்கினேன். அவ்வளவு தான்... நாடகப் பித்து நல்லா பிடிச்சுடுச்சு. அப்போதுதான் வீரபாகு என்கிறவர் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொல்லி, 'தாமரைக் குளம்' என்கிற படத்தில் நடிக்க அழைத்தார். உடனே வேலையை விட்டுட்டுப் போய் அதுலே நடித்தேன். ஆனால், பெயரும் வரல்லே; எதிர்பார்த்த பணமும் வரல்லே..!'' 

அதற்குப் பிறகுதான் நாகேஷ் மிகவும் கஷ்டப்பட்டார். அப்போது அவருக்குக் கைகொடுத்து உதவியவர் நடிகர் பாலாஜி. நாகேஷை தன் வீட்டிலேயே இருக்கச் சொல்லி, சாப்பாடும் டானிக்கும் கொடுத்து, நல்ல பர்ஸனாலிட்டியாக்கப் பாடுபட் டார். பட முதலாளிகளிடமும் டைரக்டர்களிடமும் முன்னணி நடிகர்களிடமும் நாகேஷை அறிமுகப்படுத்தி, ''சார், இவனுக்கு ஒரு சிறு பாகம் கொடுத்து ஐந்நூறு ரூபாயாவது கொடுங்கள். வேண்டு மானால் என் கான்ட்ராக்டில் ஐந்நூறு ரூபாய் குறைத்துக்கொள் ளுங்கள்'' என்று சொல்லுவாராம். ''பாலாஜி எனக்குச் செய்த உதவி களை நான் சாகும்வரை மறக்க முடியாது'' என்று சொன்னபோது நாகேஷின் கண்கள் கலங்கின. 

எல்லோரையும் சிரிக்க வைக்கும் தான், சொந்த வாழ்க்கையில் சிரிக்கமுடியவில்லை என்கிறார் அவர். அதுவும் இந்த சினிமா வாழ்க்கையின் காரணமாக, சாகும் தறுவாயில் இருந்த தன் தாயாரைக் காணமுடியாமலேயே போய் விட்டதை நினைத்து நினைத்து ஏங்குகிறார். ''இந்தப் போலி வாழ்க்கை அருவருப்பைத் தருகிறது. மனைவியுடன் பேசும்போதுகூட சினிமாவில் நடித்த ஒரு சீன்தான் ஞாபகம் வருகிறது. ஆப்த நண்பனிடம் 'நாளைக்குக் கட்டாயம் ஆறு மணிக்குச் சந்திக்கிறேன்' என்றால், அவன் 'என்னடா, உண்மையா சொல்றயா, இல்லே இதுவும் நடிப்பா?' என்கிறான். எது அசல், எது போலி என்றே புரியமாட்டேங்குது சார்'' என்கிறார் அவர். 

''வாங்குகிற பணத்திற்கு உண்மையாக உழைக்க வேண்டும் என்று நினைக்கிறவன் நான். 'கலையைக் காப்பாற்றுகிறேன்' என்று நான் சொல்லத் தயாராக இல்லை. 'கலைதான் நம்மைக் காப்பாற்றுகிறது' என்று எல்லோரும் நினைத்தால், கலையும் பிழைக்கும்; நாமும் பிழைக்கலாம்'' என்கிறார். 

மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் நடித்ததால், அவர் பெயர் 'தை நாகேஷ்' ஆயிற்றாம். ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றிவிட்டார்களாம். 

நாகேஷூக்கு ஒரே ஒரு ஆசை... 'அமெரிக்கா சென்று நகைச்சுவை நடிகர் ஜெர்ரி லூயியை நேரில் சந்தித்துப் பேச வேண்டும்!'

Wednesday, June 18, 2014

ஔவையார் - ஆத்திசூடி

ஆத்திசூடி

ஆத்திசூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி

தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள் குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப் படுகிற மெக்காலே கல்வி முறை வரை, தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துக்களைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்தி சூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள்.

உயிர் எழுத்து ஆத்திசூடிEnglish translation
அறம் செய விரும்புDesire to do good things
ஆறுவது சினம்Anger is to be controlled
இயல்வது கரவேல்Help others in any way you can
ஈவது விலக்கேல்Always be charitable
உடையது விளம்பேல்Do not boast about what you have
ஊக்கமது கைவிடேல்Do not give up hope/effort
எண் எழுத்து இகழேல்Respect learning
ஏற்பது இகழ்ச்சிBegging is despicable
ஐயமிட்டு உண்Give alms before eating
ஒப்புர வொழுகுBe virtuous
ஓதுவது ஒழியேல்Do not give up learning
ஒளஒளவியம் பேசேல்Do not talk bad about others
அஃகஞ் சுருக்கேல்Never cheat on food

- நன்றி தமிழ் விக்கிப்பீடியா 

Tuesday, June 17, 2014

மனித வாசத்துக்கு அஞ்சும் பாம்புகள்!: ஆராய்ச்சியாளர் சொல்லும் ஆச்சரியத் தகவல்

ஒற்றைப் பாம்பை அடிக்க ஊரே படையெடுப்பதுதான் நம்ம ஊர் பாணி. ஆனால், பாம்பை அடிக்கப் போனாலோ, பாம்பு காயம்பட்டுக் கிடந்தாலோ பதறிவிடுகிறார் செல்வராஜ். உடனே பாம்பை மீட்டு, சிகிச்சை அளித்து, அது உடல்நலம் அடைந்தவுடன் காட்டுக்குள் கொண்டு போய்விடுகிறார் இந்தப் பாம்பு ஆராய்ச்சியாளர். கடந்த சில ஆண்டுகளில் இப்படி அவர் காப்பாற்றிய பாம்புகளின் எண்ணிக்கை 174.

“பாம்புகளை அடிக்காதீங்க, காப்பாத்துங்க. அது விவசாயிகளின் நண்பன். அப்படியென்றால் நமக்கும் நண்பன்தானே?” என்று கேட்கும் இவர், மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியில் வன உயிரின ஆராய்ச்சியாளர். பாம்புகளைப் பற்றிப் பொதுவாக நிலவும் மூடநம்பிக்கைகளைப் பற்றி கேட்டால், எல்லாமே பொய் என்கிறார் இவர். அப்படி அவர் என்னதான் சொல்கிறார்?
நாம் நம்ப மறுத்தாலும், பாம்பு ரொம்பவும் அப்பாவியான உயிரினம். எந்தப் பாம்பும் மனிதர்களைத் துரத்தித் துரத்திக் கொத்துவதில்லை. மனித வாசம் கண்டாலே பயந்து ஓடி, மறைந்துகொள்ளும் கூச்ச சுபாவமுள்ள உயிரினம் பாம்பு. அது செல்லும் பாதையில், நாம் தவறுதலாக மிதித்துவிட்டால் நம்மைக் கொத்துகிறது அல்லது துரத்துகிறது. அதற்கு நாம் இம்சை கொடுக்காதவரை, நம்மை அவை இம்சிப்பதில்லை.

முன்னெச்சரிக்கை
இரவில் செல்லும்போது டார்ச் லைட்டுடன் செல்லுவது, நமது குடியிருப்பைச் சுற்றிப் புதர் மண்டிக் கிடக்காமல் பாதுகாப்பது; பாம்புகள் உண்ணும் தவளைகள், எலிகள் உள்ள இடங்களில் கவனமாகச் செல்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். நமது சுற்றுச்சூழல் சமன்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் உயிரினம் பாம்பு. வயல்வெளிகளிலும், நிலப்பகுதியிலும் சுற்றித் திரியும் எலிகளால் விவசாய உற்பத்தியில் 20 சதவீத இழப்பு ஏற்படுகிறது. பாம்புகள், எலிகளை உணவாக உட்கொள்வதால் பயிர் சேதம் தடுக்கப்படுகிறது. ஆனால், நாமோ பாம்பைக் கண்டாலே உயிருக்கு ஆபத்து எனப் பதறிப் போகிறோம்.
பாம்பு என்றாலே விஷம் கொண்டது என்பது மிகவும் தப்பான கற்பிதம். ஊர்வனவற்றில் 3,000 வகைகள் உள்ள இனம் பாம்பு மட்டுமே. பாம்பு இனம் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. ஆனால், மனிதன் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றினான். பல்லி இனத்திலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவை பாம்புகள். இந்தியாவில் 276 பாம்பு வகைகள் உள்ளன. இவற்றில் 171 பாம்பு வகைகள் விஷமற்றவை. மக்கள் வசிக்கும் இடங்களில் விஷத்தன்மை, கடியின் தன்மையை வைத்துப் பார்க்கும்போது நான்கு வகை பாம்புகளே நாம் உண்மையில் அஞ்ச வேண்டியவை.

4 பாம்புகள், கவனம்
அவை நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன். தவிர்க்க முடியாத நிலையில்தான் பாம்பு நம்மைக் கடிக்கிறது. அதுவும்கூடத் தற்காப்புக்காகத்தான். கடிபட்ட பயத்திலும், சரியான முதலுதவி இல்லாததாலும்தான் பாம்புக் கடியால் 99 சதவீதம் பேர் இறக்கிறார்கள். நல்ல பாம்பு, கட்டுவிரியன் கடித்தால் நரம்பு மண்டலமும், கண்ணாடிகளும் விரியன், சுருட்டை விரியன் திசுக்களும் பாதிப்படைகின்றன.
இந்தியாவில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் பேர் பாம்புக்கடியால் இறக்கிறார்கள். உலகிலேயே பாம்புக் கடியால் அதிகம் பேர் இறப்பது இந்தியாவில்தான். ஆனால், உலகில் அதிக விஷப் பாம்புகள் உள்ள நாடு ஆஸ்திரியா. அங்குப் பாம்புகளைப் பற்றிய விழிப்புணர்வும், முதலுதவி அறிவும் மிக அதிகம். அங்கே வருடத்துக்கு 10க்கும் குறைவானவர்களே பாம்புக் கடியால் இறக்கிறார்கள்.

பாம்பு முக்கியம்
‘யானை துரத்தினால் வளைந்து வளைந்து ஓடவேண்டும்; பாம்பு துரத்தினால் நேராக ஓட வேண்டும்' என்று நமது மூதாதையர்கள் வைத்திருந்த புரிதல் ரொம்ப முக்கியமானது. ஆனால், யானைகளைக் காப்பாற்றக் குரல் கொடுப்பது போல், காட்டில் வாழும் பாம்புகளைக் காப்பாற்ற இயற்கை ஆர்வலர்கள் குரல் கொடுப்பதில்லை
மனிதர்கள் இந்த மண்ணில் வாழ எந்த அளவுக்கு உரிமை உண்டோ, அதைவிட அதிக உரிமை கொண்டவை பாம்புகள். மின்சாரம் ஆபத்தானது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், மின் கம்பியை நாமாகவே போய் மிதிப்போமா? பாதுகாத்துப் பயன்படுத்துகிறோம், இல்லையா? அதைப் போலப் பாம்புகளையும் காக்கவேண்டும்.

--நன்றி தி ஹிந்து 

Tuesday, June 10, 2014

அரசியல்வாதிகளுடன் இரண்டு இரவுகள் - படித்ததில் பிடித்தது

அரசியல்வாதிகள் என்றாலே இப்படித்தான் என்று முடிவெடுத்துவிட முடியுமா?

அது ஒரு கோடைக்கால இரவு நேர ரயில் பயணம். வருடம் 1990. இந்திய ரயில்வேயின் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சிக்காக நானும் என் தோழியும் லக்னோவிலிருந்து டெல்லிக்கு ரயிலில் பயணமானோம். அதே பெட்டியில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள். அவர்களால் பிரச்சினையில்லை.
ஆனால், அவர்களுடன் வந்த சுமார் ஒரு டஜன் தொண்டர்கள் பதிவுசெய்யாத பயணிகள். அவர்கள் அடித்த லூட்டி பயங்கரமாக இருந்தது. அவர்கள் எங்களைப் பதிவுசெய்த இருக்கையிலிருந்து நகர்த்தி னார்கள். நாங்கள் கொண்டுபோயிருந்த பெட்டிகள் மீது உட்கார்ந்துகொண்டார்கள். அசிங்கம் அசிங்கமாகப் பேசினார்கள். ஆபாசமாக ஏதேதோ சொல்லிக்கொண்டே வந்தார்கள்.
பயங்கரமான இரவு
நாங்கள் ரொம்பவும் பயந்துபோனோம். கூச்சத்தில் நெளிந்தோம். அடங்காப்பிடாரிகளுடன் அது ஒரு பயங்கரமான இரவு நேர ரயில் பயணம். மறுநாள் காலை ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விட்டபடியே டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கினோம். அரண்டுபோன என் தோழி அடுத்தகட்டப் பயிற்சிக்காக அகமதாபாத் செல்ல வேண்டாம் என்று முடிவுசெய்து டெல்லியிலேயே தங்கிவிட்டார்.
என்னுடன் சேர்ந்து ரயில்வே பணிக்குத் தேர்வான உத்பல்பர்னா ஹஸரிகா என்ற பெண்ணுடன் டெல்லி யிலிருந்து அகமதாபாத்துக்குப் புறப்பட்டேன் (உத்பல்பர்னா இப்போது ரயில்வே வாரியச் செயல் இயக்குநர்). இந்தமுறை பதிவுசெய்த டிக்கெட்டைப் பெற எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. ‘வெயிட்டிங் லிஸ்ட்’ பயணிகளாக அகமதாபாத் செல்லும் இரவு நேர ரயிலில் ஏறினோம்.
டிக்கெட் பரிசோதகரிடம் எங்கள் நிலையைச் சொன்னதும் அவர் எங்களை முதல் வகுப்பு கூபேயில் உட்கார்த்திவைத்தார். இருவர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய கூண்டு அது. ஒரு கீழ் பெர்த், ஒரு மேல் பெர்த். ஏற்கெனவே இரண்டு நபர்கள் கீழ் பெர்த்தில் இருந்தார்கள். வெள்ளைக் கதர் ஆடையைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் அரசியல்வாதிகள் என்பது தெரிந்தது. நான் திடுக்கிட்டேன். என் தயக்கத்தைப் புரிந்துகொண்ட டிக்கெட் பரிசோதகர் “கவலைப்பட வேண்டாம். இவர்கள் வழக்கமாக வரும் பயணிகள். மிகவும் நல்லவர்கள். பயம் வேண்டாம்” என்று ஆறுத லாகச் சொன்னார்.
இனிய இரவு
ஒருவருக்கு 45 வயது இருக்கும். முகத்தில் பாசம் தெரிந்தது. மற்றவருக்கு 35 வயதுக்கு மேலிருக் கலாம். அவர் அதிகம் பேசவில்லை. சலனம் இல்லாதவராக இருந்தார். இருவரும் பெர்த்தின் ஓரமாக நகர்ந்துகொண்டு எங்களுக்கு உட்கார இடம் கொடுத்தார்கள். தங்களை குஜராத் மாநில பா.ஜ.க. தலைவர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பெயர் களையும் சொன்னார்கள். பெயர்கள் அப்போது மனதில் பதியவில்லை. நாங்களும் எங்களை அசாம் மாநிலத்தவர்கள், ரயில்வே அதிகாரிகள் பணிக்குப் பயிற்சி பெறுபவர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டோம்.
ஏதேதோ பேசிக்கொண்டு வந்தோம். பேச்சு வரலாறு மற்றும் அரசியல் பக்கம் திரும்பியது. இந்து மகாசபா முஸ்லிம் லீக் தொடங்கப்பட்ட காலகட்டத்தைத் தொட்டுச் சென்றது. உடன்வந்த தோழி டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் முதுகலைப் பட்டதாரி. நானும் இடையிடையே ஏதோ பேசினேன். மூத்த அரசியல்வாதி உற்சாகமாகப் பேச்சில் கலந்துகொண்டார். இளையவர் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தார். பேசாவிட்டாலும் எல்லா வற்றையும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் என்பது அவரது முகபாவத்தைப் பார்த்ததும் தெரிந்தது.
பேச்சுவாக்கில் ஷ்யாமா ப்ரஸாத் முகர்ஜியின் மறைவு பற்றிக் குறிப்பிட்டு இன்றுவரை அவர் மரணத்தின் மர்மம் விலகவில்லையே என்று சொன்னேன். அப்போது அந்த இளம் அரசியல்வாதி ஆர்வத்துடன் கேட்டார் “ஷ்யாமா ப்ரஸாத் முகர்ஜியை உங்களுக்கு எப்படித் தெரியும்?” நான் சொன்னேன். “அவர் கல்கத்தா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தபோது என் தந்தை அங்கே மாணவர்.”
இதைக்கேட்ட இளம் அரசியல்வாதி தன்னையறியாமல் தனக்கு மட்டும் கேட்கிறாற்போல் மெலிதான குரலில் சொல்லிக்கொண்டார், “பரவாயில்லை, இவர்களுக்கு நிறைய விஷயம் தெரிந்திருக்கிறது.”
அப்போது மூத்த அரசியல்வாதி “நீங்கள் குஜராத் மாநில பா.ஜ.க-வில் சேரக் கூடதா?” என்று கேட்டார். சிரித்து மழுப்பினோம். நாங்கள் குஜராத் மாநிலத்தவர் இல்லையே என்றும் சொன்னோம். அப்போது அந்த இளம் அரசியல்வாதி “அதனாலென்ன? எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. நாங்கள் திறமைசாலிகளை வரவேற்கிறோம்” என்று அமைதியாக, நிதானமாக, திடமாகச் சொன்னார்.
கண்களில் ஒளி
அப்போது நால்வருக்கும் சைவச் சாப்பாடு வந்தது. பேசாமலேயே சாப்பிட்டோம். ரயில் ஊழியர் வந்தபோது, அந்த இளம் அரசியல்வாதி நான்கு பேர்களுக்குமான பணத்தைக் கொடுத்தார். மெலிதான குரலில் நான் நன்றி என்று சொன்னபோது அதை அவர் பொருட்படுத்தவில்லை. தான் உணவுக்குப் பணம் கொடுத்தது, நான் நன்றி சொன்னது இரண்டையுமே அவர் சர்வசாதாரணமாக எடுத்துக்கொண்டார்.
அப்போதுதான் அவரை உற்றுப் பார்த்தேன், அவர் கண்களில் ஒருவித ஒளி தெரிந்தது. யாரும் அதைக் கவனிக்காமல் இருக்க முடியாது. அவர் அரிதாகவே பேசினார். ஆனால், பிறர் பேசியதையெல்லாம் முழுமையாக, பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்.
அந்த நேரம் வந்த டிக்கெட் பரிசோதகர், ரயிலில் காலி பெர்த்கள் எதுவுமில்லை என்றும் தன்னால் உதவ முடியவில்லை என்றும் சொன்னார். அப்போது அந்த இரு அரசியல்வாதிகளும் “பரவாயில்லை, நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று சொல்லிவிட்டார்கள். உடனே, அவர்கள் இருவரும் கீழ் பெர்த்தையும் மேல் பெர்த்தையும் எங்களுக்குத் தந்துவிட்டு கீழே துணியை விரித்துப் படுத்துக்கொண்டார்கள்.
முதல் நாள் இரவுக்கும் மறுநாள் இரவுக்கும் என்ன வித்தியாசம். காலையில் ரயில் அகமதாபாதை நெருங்கியபோது, அந்த இருவரும் நாங்கள் எங்கே தங்கப்போகிறோம் என்று கேட்டார்கள். “வெளியில் தங்குவதற்கு உங்களுக்குப் பிரச்சினை ஏதுமிருந்தால் தயங்காமல் என் வீட்டுக்கு வாருங்கள். எப்போதும் என் வீட்டுக் கதவு உங்களுக்காகத் திறந்திருக்கும்” என்றார் மூத்தவர்.
அதில் நிஜமான அக்கறை வெளிப்பட்டது. அப்போது இளைய அரசியல்வாதி ‘‘நான் ஒரு நாடோடி. எனக்கு வீடு வாசல் கிடையாது. அவரைப் போல் நான் உங்களை விருந்தாளிகளாக அழைக்க முடியாது. ஆனால், நீங்கள் அவர் சொல்வதைக் கேட்கலாம். இந்தப் புதிய ஊரில் அவர் வீட்டில் தங்குவது பத்திர மானதுதான்” என்றார்.
இருவருக்கும் நன்றி சொன்னோம். தங்குவது ஒரு பிரச்சினையாக இருக்காது என்று சொன்னோம். ரயில் நிற்பதற்கு முன்பு நான் என் டயரியை எடுத்தேன். “மீண்டும் பெயர்களைச் சொல்லுங்கள் குறித்துக்கொள்கிறோம்” என்றேன். ஏனென்றால், இந்த இருவரும் அரசியல்வாதிகள் பற்றி நான் கொண்டிருந்த பொதுவான அபிப்பிராயத்தை மாற்றிவிட்டார்கள்.
அந்த இரண்டு இரவு ரயில் பயணத்தைப் பற்றி 1995-ல் ஒரு அசாமிய பத்திரிகையில் எழுதினேன். இரண்டு அசாமிய சகோதரிகளுக்காகத் தரையில் படுத்துத் தூங்கிய அந்த குஜராத் அரசியல்வாதிகளைப் பாராட்டியிருந்தேன்.
இந்த நிகழ்ச்சி நடந்து சில வருடங்களுக்குப் பிறகு, இரண்டு அரசியல்வாதிகளுமே பிரபலமானார்கள். மூத்தவர் 1996-ல் குஜராத் முதல்வர் ஆனார். இளையவர் 2001-ல் குஜராத் முதல்வர் ஆனார். இந்தத் தகவல் அறிந்து ஆனந்தப்பட்டேன். இதையடுத்து இன்னொரு அசாமியப் பத்திரிகை நான் 1995-ல் எழுதிய கட்டுரையை மறுபிரசுரம் செய்தது. அவர்களுடைய பெயர்களை நான் இன்னும் சொல்லவில்லையே? அந்த மூத்த அரசியல்வாதி சங்கர்சிங் வகேலா, இளையவர் நரேந்திர மோடி.

சங்கர்சிங் வகேலா

நரேந்திர மோடி



தமிழில்: ஆர். நடராஜன்
--நன்றி தி ஹிந்து